உக்ரைனில் 3000 இந்திய மாணவர்கள் பணயக்கைதிகளாகத் தவிப்பு - ரஷ்ய அதிபர் புடின் தகவல்
கீவ்: உக்ரைனில் 3,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எட்டு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் தலைநகர் கீவ்வை இலக்காக வைத்து போரிட்டு வந்த ரஷ்ய ராணுவத்தின் குறி தற்போது கார்கிவ் நகரின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்த தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்டது இந்திய மாணவர்கள்தான். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மருத்தவ மாணவர் நவீன் நேற்று முன்தினம் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து
கார்கிவ் நகரில் தங்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.

இந்திய மாணவர்கள் அனைவரும் பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா உள்ளிட்ட பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருந்தது.எனினும் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறுவதில் இந்திய மாணவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் குழுவை பிணைக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைத்திருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவலை தெரிவித்தது.
அந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்தது. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பது குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. கார்கிவ் மற்றும் அண்டை பகுதிகளில் இருந்து நாட்டின் மேற்குப் பகுதிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு ரெயில்களை ஏற்பாடு செய்வதில் உக்ரைன் அதிகாரிகளின் ஆதரவை நாங்கள் கோரியுள்ளோம்.
உக்ரைனில் உள்ள எங்கள் தூதரகம் உக்ரைனில் உள்ள இந்திய பிரஜைகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. உக்ரைன் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு, பல மாணவர்கள் நேற்று கார்கிவ்வை விட்டு வெளியேறியுள்ளனர் என்று அவர் கூறினார்.
இதனிடையே இந்தியாவைச் சேர்ந்த 3000 மாணவர்கள் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார். சீன மாணவர்களும் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். "உக்ரைன் வெளிநாட்டினரை வெளியேற்றுவதை தாமதப்படுத்த முயற்சிக்கிறது, இதன் காரணமாக அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்" என்று புடின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications