எகிப்தில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: சவுதி, ரஷ்யாவை சேர்ந்த 33 பயணிகள் பலி!
கெய்ரோ: எகிப்து நாட்டில் இரு பஸ்கள் மோதிய விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். இதில் சவுதி அரேபியா, ஏமன், ரஷ்ய நாட்டுக்காரர்களும் அடங்குவர்.
எகிப்து நாட்டின் சார்ம் எல்-செயிக் பகுதியிலிருந்து கிளம்பிய பஸ்சும், நிலே டெல்டா பகுதியில் இருந்து புறப்பட்ட மற்றொரு பஸ்சும், இன்று அதிகாலை சினாய் என்ற பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பஸ்களில் பயணித்த 33 பேர் உயிரிழந்தனர், 41 பேர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தர்களில் பெரும்பாலானோர் சவுதி அரேபியா, ரஷ்யா, ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நாட்டு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், எகிப்து தலைநகர் கெய்ரோவில், மினி பஸ் மீது ரயில் மோதிய விபத்தில் 26 பேரும், 2012ம் ஆண்டு கெய்ரோவில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 50 குழந்தைகளும் உயிரிழந்தனர். 2002ம் ஆண்டு கெய்ரோவில் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 373பேர் உயிரிழந்தனர். இவையெல்லாம் எகிப்து நாட்டின் மிகப்பெரிய விபத்துகளாகும்.