ஸ்வாசிலாந்தில் அழகிப் போட்டிக்கு செல்லும் வழியில் பயங்கர விபத்து: 38 இளம்பெண்கள் பலி
பபானே: ஸ்வாசிலாந்தில் டிரக் ஒன்று கார் மீது மோதிய விபத்தில் அழகிப் போட்டிக்கு சென்று கொண்டிருந்த 38 இளம்பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.
ஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலாந்தின் மன்னர் மூன்றாம் ஸ்வாதியின் மனைவியை தேர்ந்தெடுக்கும் அழகிப் போட்டி வரும் திங்கட்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கன்னிப் பெண்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு கிளம்பினர்.

அப்படி அழகிப் போட்டியில் கலந்து கொள்ள அழகிகளை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பபானே மற்றும் மான்சினி ஆகிய முக்கிய நகரங்கள் இடையே கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரக்கில் இருந்த 38 இளம்பெண்கள் பலியாகினர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து நாளைய அழகிப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருமணமான மன்னரின் முன்பு கன்னிகள் நடனம் ஆடுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் அழகி மன்னரின் அடுத்த மனைவியாவார். முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியின்போது மன்னர் தனது 14வது மனைவியை தேர்வு செய்தார்.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த விபத்தால் தேசம் துயர் அடைந்துள்ளதாக மன்னர் தெரிவித்துள்ளார். ஸ்வாதி தனது தந்தை இறந்த பிறகு 1982ம் ஆண்டு ஸ்வாசிலாந்தின் மன்னர் ஆனார்.












Click it and Unblock the Notifications