காபூல் ஜெர்மன் தூதரகத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல்... 4 பேர் பலி
காபூல் ஜெர்மன் தூதரகத்தில் தற்கொலை படை தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 4 பேர் பலியாகினர். அதில்,100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
காபூல்: ஆப்கானில் மஷார் இ-ஜெரீப் நகரத்தில் செயல்பட்டு வரும் ஜெர்மன் தூதரகத்தில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் 110 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் வியாழனன்று இரவு 11 மணி அளவில் நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பால்ஹ் மாகாண காவல்துறை தலைவர் செய்யது கமல் கூறியதாவது: ஜெர்மன் தூதரக வாயிலில் வெடிகுண்டு நிரப்பிய கார் மூலம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், அதனைத் தொடர்ந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வன்முறையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரும் குடியிருப்பு வாசிகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதில், படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலரது நிலை மிகவும் மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று சுகாதாரத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெர்மன் தூதரக தாக்குதலுக்கு ஆப்கான் தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் குண்டுஸ் நகரில் அண்டை நாட்டினர் நடத்திய விமானத் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 3 ஆம் தேதி குண்டுஸ் நகருக்கு அருகில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது நேட்டோ படைகள் தொடர் விமானத் தாக்குதல் நடத்தின. முன்னதாக ஆப்கான் மற்றும் வெளிநாட்டு படைகள் இணைந்து தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டன.
ஆப்கானில் ஜெர்மன் வீரர்கள் 1 ஆயிரம் பேர் முகாமிட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பால்ஹ் மாகாணத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.