ஈராக்கில் 40 இந்தியர்களை கடத்திச் சென்றது சதாம் ஆதரவுப் படை!
மொசூல்: ஈராக்கில் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி முன்னேறி வரும் சதாம் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். 40 இந்தியர்களை கடத்திச் சென்றுள்ளது.
ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் அரசுக்கு எதிராக முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆதரவு சன்னி முஸ்லிம்கள் ஆயுதம் தாங்கி போராடி வருகின்றனர். அவர்கள் கடந்த 2 வாரங்களில் ஈராக்கின் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி உள்ளனர்.

தற்போது தலைநகர் பாக்தாத்தைக் கைப்பற்றுவதற்காக அவர்கள் முன்னேறி வருகின்றனர். பாக்தாத்தை நோக்கி முன்னேறும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் மீது எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். படையினர் கைப்பற்றிய மொசூல் நகரில் பணியாற்றிக் கொண்டிருந்த 40 இந்தியர்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இத்தகவலை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
இவர்கள் மொசூல் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் பல்வேறு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள். இதைத் தொடர்ந்து ஈராக் அரசுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டுள்ளது.
ஈராக்குக்கான முன்னாள் இந்திய தூதர் சுரேஷ் ரெட்டியை மொசூல் நகருக்கு அனுப்பி வைக்கிறது மத்திய அரசு.
இதேபோல் ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் உள்ள சதாம் உசேனின் சொந்த ஊராக திக்ரீத் நகரில் 46 இந்திய செவிலியர்கள் சிக்கியுள்ளனர். இவர்களில் 14 பேர் நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவித்துள்ளோர்.
எஞ்சியோர் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லியில் 24 மணிநேர உதவி மையம்- தொடர்பு எண்கள்:
இதனிடையே ஈராக்கில் உள்ள இந்தியர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சகம் 24 மணிநேர உதவி மையத்தை தொடங்கியுள்ளது.
இந்த சேவை மையத்தை தொடர்பு கொள்ள மின் அஞ்சல்: [email protected].
தொலைபேசி எண்கள்: +91 11 2301 2113 ; +91 11 2301 7905 ; +91 11 2301 4104
ஏற்கெனவே ஈராக்கில் பாக்தாத் இந்திய தூதரகத்தில் 24 மணி நேர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications