இந்தோனேசியாவில் நிலநடுக்கம்... வீடுகள் இடிந்தன: சுனாமி எச்சரிக்கையில்லை
திமோர்: இந்தோனேசியாவில் இன்று காலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இதனால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. அதிகமான உயரத்தில் அலைகள் எழுந்தாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
இந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் உள்ள திமோர் தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள குபாங் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் குலுங்கின. அதிகாலை 4.30 மணி அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் பீதி அடைந்தனர். அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் ஓட்டம் பிடித்தனர்.

அங்கு 5.2 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இதனால் ஏற்பட்ட உயிர்சேதம் மற்றும் காயம் அடைந்தவர்கள் விவரம் வெளியிடப்படவில்லை.வழக்கத்துக்கு அதிகமான உயரத்தில் கடல் அலைகள் எழும்பின. இருந்தும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.
பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்ப ஆபத்து பகுதியில் இந்தோனேசியா உள்ளதால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. முன்னதாக கடந்த 2004 ஆம் ஆண்டு சுமத்ரா தீவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சுனாமி தாக்கியது. கடந்த 2013 ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் பலியாகினர் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications