பாக்தாத்: கண்கள் பிடுங்கப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள் கண்டெடுப்பு!
பாக்தாத்: ஈராக் தலைவர் பாக்தாத்தின் தெற்கு பகுதியில் கண்கள் பிடுங்கப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கிலுள்ள திக்ரித், மொசூல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை அவர்கள் கைப்பற்றியுள்ள, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அந்நாட்டு ஆளும் கட்சிக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். தீவிரவாதிகள் கைவசம் உள்ள பகுதிகளை மீட்பதற்காக ராணுவத்தினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் கண்கள் பிடுங்கப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் 50 சலடங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் சாத்மான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறுகையில், ''பாக்தாத்தின் தெற்குப் பகுதியில் சுமார் 95 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஹில்லாக். இந்த பகுதியில் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் கண்கள் பிடுங்கப்பட்டு, கைகள் கட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது அவர்களின் உடலில் உள்ள துப்பாக்கிக் குண்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோல உடலில் குண்டுகள் பாய்ந்த நிலையில் பிணங்கள் கிடப்பது 2006, 20007 ஆகிய ஆண்டுகளில் சர்வ சாதாரணமான காட்சியாகும். அதன் பின்னர் தற்போதுதான் அப்படி நிறைய உடல்கள் ஒரே இடத்தில் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.