2 வாரங்களுக்கு பிறகு துருக்கியில் 6.3 ரிக்டரில் மீண்டும் நிலநடுக்கம்.. 3 பேர் பலி! 213 பேர் காயம்
துருக்கி- சிரியா எல்லையில் மீண்டும் நிலநடுக்கம். 3 பேர் பலி
அங்காரா: துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர்.
துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை காசியான்டெப் நகரை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
இந்த நாட்டின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் புரட்டி போட்டது. பல உயர்ந்த கட்டடங்கள் எல்லாம் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். துருக்கி, சிரியாவில் இதுவரை 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தால் பலியாகிவிட்டனர்.
ஆங்காங்கே தாய், தந்தையரை இழக்கும் குழந்தைகள், குழந்தைகளை இழக்கும் பெற்றோர், தங்கள் உறவுகளை இழக்கும் மக்கள் ஆகியோர் கதிகலங்கி நின்றனர். ஆங்காங்கே மரண ஓலங்களும் அழுகுரல்களும் கேட்டன. அங்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் சென்றனர்.

இந்த நிலையில் நிலநடுக்கத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு பிறகு, தீவிர மீட்பு பணிகள் நடந்து வந்த துருக்கியில் நேற்று மாலையுடன் மீட்பு பணிகள் நிறைவடைந்தன. இந்நிலையில் துருக்கி, சிரியாவில் நேற்று இரவு மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஐரோப்பிய மத்திய தரைக் கடல் நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, ஹடாய் மாகாணத்திற்கு அருகிலுள்ள துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணமான அனடோலுவில் ஏற்பட்ட இரண்டு புதிய நிலநடுக்கங்களில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 213 பேர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று இடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் துருக்கி உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. முன்னதாக நேற்று இரவு 8.04 மணிக்கு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் (6.3 ரிக்டர் அளவுகோல்) 16.7 கிலோமீட்டர் (10.4 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது.

இரண்டாவது நிலநடுக்கம் (5.8 ரிக்டர் அளவுகோல்) 7 கிமீ (4.3 மைல்) ஆழத்தில் இருந்தது. இரண்டுமே சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த கட்டிடங்களிலிருந்து விலகி இருக்குமாறும் பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 வாரங்கள் கழித்து மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த நாட்டு மக்கள் மேலும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications