ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான போர்: அமெரிக்காவுடன் கைகோர்க்கும் 7 நாடுகள்!
பாக்தாத்: ஈராக் மற்றும் சிரியாவில் உள்நாட்டுப் போரை நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான யுத்தத்தில் குதிக்க அமெரிக்காவுடன் 7 நாடுகள் கை கோர்த்துள்ளன.
ஈராக், சிரியாவில் சன்னி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை ஆயுதப் போரின் மூலம் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசமாக பிரகடனம் செய்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். அத்துடன் தங்கள் வசமுள்ள பகுதிகளில் வாழும் சிறுபான்மை மதத்தவர் மதம் மாற வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ்.,
இதை ஏற்க மறுத்த ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .இதனைத் தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஈராக்கின் குர்திஷ் படையினருக்கு பெருமளவு ஆயுதங்களை வழங்க முன் வந்தது அமெரிக்கா.
வான்வழித் தாக்குதல்
அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கத்துக்கு எதிரான அமெரிக்காவின் போர் விமானங்கள் வான்வழித் தாக்குதலை நடத்தி ஓரளவு அதன் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தியது.
மொசூல் அணை மீட்பு
அமெரிக்கப் படைகள் விரைந்த பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் இருந்த மொசூல் அணை மீண்டும் குர்திஷ் மாகாண அரச படைவசமானது,
பத்திரிகையாளர் தலை துண்டிப்பு
இதனால் ஆத்திரமடைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் அமெரிக்காவை தங்களது உள்நாட்டு பிரச்சினையில் தலையிட வேண்டாம் என்று கூறி அமெரிக்க பத்திரிகையாளர் போலியை படுகொலை செய்தனர்.
தாக்குதல் தீவிரமாகிறது
இந்த படுகொலை வீடியோ வெளியீட்டுக்கு பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
7 நாடுகள் கை கோர்க்கின்றன
ஈராக் மற்றும்அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு அல்பேனியா, கனடா, குரோஷியா, டென்மார்க், இத்தாலி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவைகளும் ஈராக்-சிரியா போர்க்களத்தில் அமெரிக்காவின் பங்காளிகளாக களம் இறங்க இருக்கின்றன.
சிரியாவிலும் தாக்குதல்
இதுவரை ஈராக்கில் தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்கா, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். முகாம்களையும் தாக்குவது என்று முடிவு செய்துள்ளது.
யுத்தம் உக்கிரம்?
இதனால் ஈராக் மற்றும் சிரியாவில் வரும் நாட்கள் யுத்த அனல் உச்சத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.