ஈராக்கில் ரம்ஜான் நாளில் கார் குண்டு வெடிப்பு... 80 பேர் பலி: ஐஎஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்
பாக்தாத்: ஈராக்கில் தற்கொலை படை தீவிரவாதி நடத்திய கார் வெடி குண்டு தாக்குதலில் 80 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். ரம்ஜான் பண்டிகை நாளில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈராக், டியாலா மாகாணத்தில் உள்ள கான் பெனிசாத் நகர் மார்க்கெட் பகுதியில் தீவிரவாதிகள் கார் வெடி குண்டு தாக்குதலை நடத்தி உள்ளனர். தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய இந்த கார் வெடி குண்டு தாக்குதலில் 80 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் இந்த தாக்குதலில், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பலியானோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மார்க்கெட் பகுதியில் இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காராணம் தெரியவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரம்ஜான் நாளில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது இஸ்லாமியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்பு
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுஉள்ளது. கார்வெடி குண்டு தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்று ஐ.எஸ். தீவிரவாதம் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு உள்ளது. ஆனால் பொறுப்பு ஏற்று தகவல் வெளியிட்டு உள்ள டுவிட்டர் கணக்கானது ஐ.எஸ். தீவிரவாதிகள் உடையது தானா என்பது உடனடியாக சோதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போராடி மீட்பு
கடந்த ஆண்டு டியாலா மாகாணத்தின் பெரும்பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி இருந்தனர். பின்னர் ஈராக் மற்றும் குர்திஷ் படைகள் போராடி சிலபகுதிகளை தங்கள்வசம் கொண்டு வந்தனர். முழுபகுதியையும் தங்களுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கு போராடிவருகின்றனர். இருதர்பபு இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஈராக்கில் ரம்ஜான் மாதம் தொடங்கியதுமே, பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும் இத்தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது அங்குள்ள மக்களுக்கு பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.