அட கொடுமையே.. பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை விதித்த கிராம பஞ்சாயத்து!
பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கள்ள உறவில் ஈடுபட்டதாககூறி இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பல்வேறு கிராமங்களில் இன்றும் பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் பெண்கள் அடிமைகளை போலவே நடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அதிர்சியளிக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

சர்ச்சைக்குரிய ராஜன்புர் கிராமம்
அதாவது பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது ராஜன்புர் என்ற கிராமம். மதவாதம் நிறைந்த இந்த கிராமத்தில் பெண்களுக்கான பல உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது.

கள்ள உறவில் ஈடுபட்டதாக..
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 19 வயது இளம்பெண் ஒருவர் தனது உறவினருடன் கள்ள உறவில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு மரண தண்டனை விதித்து அக்கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டது. மேலும் அந்தப் பெண்ணை கிராம மக்கள் கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உண்மையில் நடந்தது என்னவென்றால்
ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அந்த பெண் தூங்கும் சமயத்தில் வீட்டிற்குள் நுழைந்த உறவுக்கார இளைஞன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளான்.

தப்பியோடிய பெண்
நடந்த உண்மையை அந்த பெண் பஞ்சாயத்தில் கூறியும், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, அந்த கிராமத்தை விட்டு தப்பி ஓடிய அந்த பெண் போலீசில் சென்று புகாரளித்தார்.
புகாரின் பேரில் கிராம பஞ்சாயத்துதாரர்கள் மீது வழக்குப்பதிவு
செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு விடுதியில் பெண்
மேலும் பாதுகாப்பான அரசு விடுதியில் அந்த பெண்ணை தங்க வைத்துள்ளனர். பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கிராம பஞ்சாயத்தார் அளித்த தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு மகளிர் அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications