தமிழை சொதப்பும் ஜூலியும், கண்டுகொள்ளாத கவிஞரும்!
ஜார்ஜியா, அமெரிக்கா: பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியின் செயல்பாடுகள் குறித்து நமது அமெரிக்க வாசகர் எழுதி அனுப்பியுள்ள கருத்து இது.
வாசகர் ருக்மாங்கதனின் கருத்து: தமிழ் நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த வாய்ப்பினால் தமிழக மக்களின் வரவேற்பினை பெற்றார். சிலருக்கு இது பொறாமையை ஏற்படுத்தினாலும், பெருவாரியான மக்கள் ஜூலிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் போக போக அவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் மக்கள் அவரை வெறுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம், ஒருவரின் முன்னால் நன்றாக பேசிவிட்டு, பின்னால் அவரை பற்றியே புறம் பேசுகிறார். சந்தர்பத்துக்கு ஏற்றமாதிரி நிறம் மாறுகிறார். தேவை இல்லாத இடத்தில் அழுது சீன் போடுகிறார்.
நாடகம் ஆடினார்
கமல் முதலில் ஜூலியை பெட்டியை எடுத்து வர சொல்லி, ஜூலியை வெளியே அனுப்புவது போல ஒரு நாடகம் ஆடினார். இதை உண்மை என்று நம்பிய ஜூலி சிநேகனையும், ஆரவையும், சக்தியையும் கட்டிப் பிடித்து அழுதார்.
ஆர்த்திதான் வெளியேற்றம்
பின்னர் கமல், ஆர்த்திதான் வெளியேறுகிறார் என்று சொன்னவுடன், ஜூலி மீண்டும் அழுதார் மற்றும் கொஞ்சம் ஓவராகவும் பேசி கமிரா முன்னால் ஓட்டுபோட்ட மக்கள் காலில் விழுந்தார். அவர் செய்கின்ற காரியம் பிக்பாஸ் குடும்பத்தில் அனைவரும் சொல்வதுபோல, கொஞ்சம் அதிகமாக நடிக்கிறார் என்பது போலதான் உள்ளது. இது மக்களுக்கு பிடிக்கவில்லை என்பது சமூகவலைதளங்களின் மூலம் பட்டவர்த்தனமாக தெரிகிறது.
தமிழில் ஆர்வம் கொண்டவரா
இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதால், மக்கள் இவரை தமிழில் ஆர்வம் கொண்டவர் எனவும், தமிழில் திறமை உள்ளவர் என்றும் நினைத்திருந்தார்கள். ஆனால் ஜூலி மக்களின் நினைப்புக்கு தகுதி அற்றவர் என்பது இப்பொழுது தெரிய வருகின்றது.
தமிழை சொதப்பிய ஜூலி
ஜூலியை வெளியேற்றும் நாடகத்தில், அவர் வெளியேறுவதற்கு முன்னால், அங்கே இருந்த பலகையில் பிக்பாஸ் குடும்பத்தாருக்கு வாசகம் ஒன்றை எழுதினர். அதாவது "இங்கு இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல, சாமானியர்கள்". சாதாரணமானவர்கள், சாமானியர்கள் இரண்டுக்கும் ஒரே அர்த்தம் தான். இதை பார்த்துகொண்டிருந்த கவிஞர் சிநேகன்கூட இந்த பிழையை சுட்டிகாட்டமல் இருப்பது வருத்தம் அளிக்கின்றது.
கவிஞர் சிநேகன் கண்டுகொள்ளவில்லை
இதற்கு முன்னால் ஒருமுறை ஜூலி தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியது மனோன்மணியம் சுந்தரனார் என்பதற்கு பதில் தாயுமானவர் என்று தவறாக சொன்னார். அதையும் பள்ளி ஆசிரியராக இருந்த சிநேகன் கண்டுகொள்ளவில்லை. நான்கு கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படி தவறாக சொல்லப்படுவதால் அதை தெரிந்தவர்கள் திருத்தாமல் இருப்பதால், குழந்தைகள் மனதில் அந்த தவறான பதில் தான் பதிந்துவிடும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கருத்தும் கூட. திருத்தி கொண்டால் நல்லது.
ருக்மாங்கதன்.
ஜார்ஜியா, அமெரிக்கா