ரஷ்ய பயணத்தை முடித்து துர்க்மெனிஸ்தான் சென்றார் மோடி...சிறப்பான வரவேற்பளித்த புதினுக்கு நன்றி..
மாஸ்கோ: ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி துர்க்மெனிஸ்தான் சென்றார்.
சிறப்பான வரவேற்பு அளித்த ரஷ்ய அதிபர் புதினுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் பிரதமர் மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெள்ளிக் கிழமை ரஷ்யாவின் உஃபா நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டார்.
இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்பும் பங்கேற்றார். இந்த மாநாட்டின்போது, இருநாடுகளின் பிரதமர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இருவரும் சந்தித்து பேசினர். நவாசின் அழைப்பை ஏற்று அடுத்தாண்டு இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள தெற்காசிய தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து மூன்று நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி துர்க்மெனிஸ்தான் சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து அஷ்காபட் நகரில் துணை பிரதமரை சந்தித்து பேசினார்.
முன்னதாக ரஷ்ய அதிபர் புதினுக்கு மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். தான் முழு திருப்தியுடன் ரஷ்யாவிலிருந்து புறப்படுவதாகவும், இங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் சிறப்பான வரவேற்பு அளித்த ரஷிய அதிபர் புதினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் ட்விட்டரில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications