உறைந்து போன சீனாவின் “துயரம்”- கப்பல் போக்குவரத்து பாதிப்பு!
பெய்ஜிங்: சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய நதியான மஞ்சள் ஆறு பருவநிலை மாற்றத்தால் பனிக் கட்டியாக உறைந்து வருவதால் கப்பல் போக்குவரத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய நதி, மத்திய சீனாவில் உள்ள மஞ்சள் ஆறு. இதன் இன்னொரு பெயர் சீனாவின் துயரம் என்பதாகும். இதற்கு ஏற்றவாறு இந்த நதி இப்போது பருவநிலை மாற்றத்தில் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.
மஞ்சள் ஆறு பாயும் பகுதிகளில் கடும் குளிர் பொழிந்து வருவதால், நதியின் மேற்பகுதியில் முழுவதுமாக பனிக் கட்டிகள், பாளம் பாளமாக மிதந்து செல்கின்றன.

கப்பல் போக்குவரத்து பாதிப்பு:
இதனால் கப்பல் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பனிக் கட்டிகள் 4 கிலோ மீட்டர் அளவுக்கு பரவி உள்ளது. மொத்த தண்ணீரின் 30 விழுக்காடு அளவிற்கு பனிக் கட்டிகள் உருவாகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

9 மாகாணங்கள்:
மஞ்சள் ஆறு சீனாவின் 2வது நீளமானதும் உலகின் 6 ஆவது நீளமானதும் ஆகும். மேற்கு சீனாவின் சிங்ஹாய் மாகாணத்திலுள்ள பாயன் ஹர் மலைத்தொடரில் தோன்றி 9 மாகாணங்கள் வழியாக 5,464 கிமீ தொலைவு ஓடி பொகாய் கடலில் கலக்கிறது.

பரவி ஓடும் ஆறு:
மஞ்சள் ஆற்றுப் படுகை கிழமேற்காக 1900 கிமீ மற்றும் வடக்கு தெற்காக 1100 கிமீ வரை பரவியுள்ளது. இதன் படுகையின் மொத்தப்பரப்பு 742,443 சதுரகிமீ ஆகும்.

சீன நாகரிகத்தின் தொட்டில்:
மஞ்சள் ஆறு சீன நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. இங்கேயே வட சீன நாகரிகம் தோன்றியது. இவ்வாற்றுப்பகுதி பழங்காலத்தில் மற்ற பகுதிகளை விட மிகவும் செழிப்பாக வளம் மிகுந்து இருந்தது.

வாகனப் போக்குவரத்து பாதிப்பு:
ஆனால் அடிக்கடி இவ்வாற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சீனாவின் துயரம் என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தப் பனிக்கட்டிகள் சாலையோரம் ஒதுங்குவதால் வாகனப் போக்குவரத்தும் இந்தப் பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications