டிரம்பை விடுங்க! குஜராத் உட்பட 6 மாநில மாணவர்களுக்கு விசா வழங்க யோசிக்கும் மற்றொரு நாடு! என்ன காரணம்
கான்பரா: அமெரிக்காவில் வெளிநாட்டினர், குறிப்பாக மாணவர்கள், மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே இப்போது சத்தமே இல்லாமல் மற்றொரு நாடும் இந்திய மாணவர்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாகக் குஜராத், பஞ்சாப் உட்பட 6 இந்திய மாநிலங்கள் மீது கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது..
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டிரம்ப் அங்குள்ள வெளிநாட்டினர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மட்டுமின்றி சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களுக்கு எதிராகவும் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இந்திய மாணவர்கள்
குறிப்பாக அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தான் பெரிய சிக்கலில் உள்ளனர். பெரிய தொகையை செலவழித்து வெளிநாடு செல்லும் மாணவர்கள் இப்போது நாடுகடத்தல் சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்கள். சிறு விதிமீறல் அல்லது தவறான குற்றச்சாட்டிற்குக் கைது செய்யப்பட்டது உள்ளிட்டவைக்கு கூட நாடுகடத்தல் உத்தரவை எதிர்கொள்கிறார்கள். இதுபோல அங்குச் சுமார் 1000+ மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் இதுபோன்ற நடவடிக்கைகள் அங்குப் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே சத்தமே இல்லாமல் இன்னொரு நாடும் இந்திய மாணவர்களுக்கான விசா நடைமுறைகளைக் கடுமையாக்கியுள்ளது. அது வேறு எந்த நாடும் இல்லை ஆஸ்திரேலியா தான். அங்குச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு திடீரெனக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆஸ்திரேலிய அரசு
அதாவது பொதுவாக மாணவர் விசா என்பது படிப்பிற்காக வழங்கப்படுவது. அந்த நாட்டிற்குச் சென்று படிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தால் விசாவை மாற்றி அங்குத் தங்கலாம். இல்லை என்றால் படிப்பை முடித்தவுடன் திரும்பிவிட வேண்டும். ஆனால், மாணவர் விசா எளிதாகக் கிடைக்கும் என்பதால் சும்மா ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கொண்டு மாணவர் விசா வாங்கும் பலர், அதை வைத்தே அங்கு வேலை செய்வதாகவும் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
6 இந்திய மாநிலங்கள்
இதன் காரணமாகவே ஆஸ்திரேலிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக 6 இந்திய மாநிலங்களில் இருந்து வரும் விண்ணப்பங்களுக்குக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், காஷ்மீர் மாநிலங்களில் இருந்து வரும் விண்ணப்பங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் மோசடி விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா முடிவு
சில பல்கலைக்கழகங்கள் இந்த மாநிலங்களில் இருந்து வரும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டன. சில பல்கலைக்கழகங்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. மேலும், சில ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் இந்திய உள்துறைத் துறை அமைச்சகத்துடன் இணைந்து மாணவர் விசா சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளது. அதேநேரம் இந்த உத்தரவு அங்கு நாடு முழுக்க அமல்படுத்தப்படவில்லை. எந்த பல்கலைக்கழக மாணவர்கள் மோசடியால் நாடுகடத்தல் நடவடிக்கையை அதிகம் எதிர்கொள்கிறார்களோ.. அந்த பல்கலைக்கழகங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கை இந்திய மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கும். தூதரகப் பேச்சுவார்த்தை மூலம் இந்தச் சிக்கல் தீர்க்கப்படாவிட்டால், இது இருதரப்பு கல்வி உறவுகளைப் பாதிக்கக்கூடும் என்பதால் மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications