"யாரும் வெளியே வரக்கூடாது!" ஸ்ட்ரிக்ட் உத்தரவுப்போட்ட சீன அரசு! பேய் நகரமான ஷாங்காய்! இதுதான் காரணம்
பெய்ஜிங்: உலகில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சீனாவில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதல்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அலறவிட்டது.
ஆல்பா, பீட்டா, டெல்டா என்ற கொரோனா அலைகளைத் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் கொரோனா வைரஸை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. சமீபத்தில் தான் ஓமிக்ரான் கொரோனா உலகெங்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.

கொரோனா வைரஸ்
இந்த கொரோனா வைரஸ் காரணமாகவே உலகின் அனைத்து நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகப் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வேக்சின் பணிகளுக்குப் பின்னர், இப்போது தான் உலக நாடுகள் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அதேநேரம் சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் இப்போது வைரஸ் பாதிப்பு மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் அங்குப் பல மாகாணங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாங்காய்
அதன்படி சீனாவின் ஷாங்காய் நகரில் தற்போது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷாங்காய் மக்கள் மிக மோமசாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஷாங்காய் நகரில் உள்ள 2.6 கோடி மக்களும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக உலகிலேயே மிகவும் பரபரப்பான நகரங்களில் ஒன்றான ஷாங்காய் இப்போது முற்றிலுமாக முடங்கி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முழு ஊரடங்கு
இந்த முழு ஊரடங்கு நாய் உரிமையாளர்களுக்கு புதிய தலைவலியைக் கொடுத்துள்ளது. பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் நாய்களைத் தினசரி வாக்கிங் கொண்டு செல்ல வேண்டும். இந்த ஊரடங்கால் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய் உரிமையாளர் ஒருவர் புதிய முறையில் வாக்கிங் அழைத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. 3ஆவது மாடியில் வசிக்கும் ஒருவர் தனது, நாயை நீண்ட கயிற்றைக் கொண்டு தெருவில் இறக்குகிறார். மேலே இருந்தபடியே நாய் வாக்கிங் செல்வதைக் கண்காணிக்கிறார். பின்னர், மீண்டும் மேலே இருந்து நாயை இழுத்துக் கொள்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஓமிக்ரான்
இந்த முழு ஊரடங்கு காரணமாக ஷாங்காய் நகரம் இப்போது பேய் நகரமாக மாறியுள்ளது. ஷாங்காய் முழு ஊரடங்கை விளக்கும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் ஷாங்காய் நகரில் ஆம்புலன்ஸ் தவிர எந்த வாகனமும் சாலைகளில் இல்லை. இதனால் ஷாங்காய் நகர் முழுவதுமே நிசப்தத்தில் மூழ்கி உள்ளது. சீனாவில் இப்போது தான் ஓமிக்ரான் பரவல் தொடங்கி உள்ள நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் ஷாங்காயில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டியேலே இருங்கள்
அதைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை இந்த முழு ஊரடங்கு நகரின் கிழக்கு மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டன. மீண்டும் பரவும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்கள் இப்போது வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கால் நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது, அதேபோல உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற அத்தியாவசியமற்ற கடைகளும் மூடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications