லண்டனில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில் 3 பேர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள்!
லண்டன்: லண்டனில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில் 3 பேர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. மற்ற 3 பேரும் காஞ்சிபுரம் என்றும் தெரிய வந்துள்ளது.
லண்டனின் எம்1 ஜங்க்ஷன் சாலையில் குடிபோதையில் படு வேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் மினி பஸ் கூழாக சிதைந்து போனது. இதில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த 8 பேருமே இந்தியர்கள் ஆவர். அவர்களில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். விபத்தை ஏற்படுத்திய டிரைவர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். அளவுக்கு அதிகமாக அவர் குடித்திருந்ததே விபத்துக்குக் காரணம்.
குடிகார டிரைவரால் வந்த வினை
31 வயதாகும் ரைசார்ட் மெசியரக் என்ற அந்த டிரைவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 மடங்கு அதிகம் குடித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னொரு கண்டெய்னர் லாரி டிரைவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மினி பஸ்
விபத்தில் சிக்கிய மினி பஸ்ஸை ஓட்டிச் சென்றவர் சிரியாக் ஜோசப். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவரும் இறந்து விட்டார். அந்த பஸ்ஸில் 11 பேர் இருந்துள்ளனர். பஸ் விபத்தில் சிக்கியதில் கூழாகிப் போய் விட்டது. வாகனத்திற்குள் சிக்கியவர்களை மிகப் பெரிய போராட்டத்திற்குப் பின்னர் மீட்டுள்ளனர்.
கும்பகோணம் - காஞ்சிபுரம்
விபத்தில் சிக்கி உயிரிழந்த 6 தமிழர்களில் 3 பேர் காஞ்சிபுரத்தையும், 3 பேர் கும்பகோணத்தையும் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரம் பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் மனோரஞ்சன் லண்டனில் பணியாற்றி வருகிறார். அவரை பார்ப்பதற்காக பன்னீர்செல்வமும், அவருடைய மனைவி வள்ளி, தங்கை தமிழ்மணி உட்பட 4 பேர் லண்டன் சென்றனர்.
சம்பவ இடத்திலேயே மரணம்
அங்கிருந்து சுற்றுலா தலத்திற்கு செல்வதற்காக மினி பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில்தான் பன்னீர்செல்வம், வள்ளி, தமிழ்மணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதேபோல கும்பகோணத்தைச் சேர்ந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.