இந்த வேலையெல்லாம் ஜுஜுபி... இனி, ‘சிட்டி’யே செஞ்சுடும்!
நியூயார்க்: மிக மிக பாதுகாப்பான வேலை என்று அமெரிக்கர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேலைகளை எதிர்காலத்தில் ரோபோட்களே செய்து விடும் என்று கணித்துள்ளனர். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அமெரிக்காவில் வரும் காலத்தில் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இன்று பல்வேறு தொழில்களிலும் கம்ப்யூட்டர்களின் ஆதிக்கமே மேலோங்கி வருகிறது. மனிதர்கள் செய்த பல வேலைகளை இன்று கம்ப்யூட்டர்களே செய்கின்றன.
இது தொழில்நுட்ப வளர்ச்சிதான் என்றாலும், இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் எதிர்காலத்தில் பாதுகாப்பான வேலை என்று கருதும் பல வேலைகளும் கூட கம்ப்யூட்டர்களால் காவு வாங்கப்படக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தொழிற்புரட்சி....
கடந்த 1930ம் ஆண்டு உலகின் பல பகுதிகளிலும் பெரும் தொழிற்புரட்சி வெடித்தது. அப்போது பிரபலமான தொழில் வல்லுநர் ஜான் மெனார்ட் கெய்ன்ஸ், உலகில் தொழில்நுட்பப் புரட்சி வெடிக்கும் என்று கணித்தார். அதுபோலவே நடந்தது.
தொழில்நுட்ப வளர்ச்சித் தீர்வு...
ஆனால் இது தற்காலிகமானதாகவே இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அவர் விளக்குகையில், மனிதனின் பொருளாதார பிரச்சினைக்கு இந்தத் தொழில்நுட்ப வளர்ச்சி தீர்வாக இருக்கும் என்றார்.
வேலையில்லாத் திண்டாட்டம்...
ஆனால் இன்று தொழில்நுட்ப வளர்ச்சி பொருளாதாரத்தைத் தாண்டி நடுத்தர வர்க்கத்தினரை பெரும் பாதிப்புக்கு்ளாக்கி வருகிறது. காரணம், தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதே. தொழில்நுட்ப வளர்ச்சியல் இன்று வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கையே அதிகரித்துள்ளது.
நடுத்தரவர்க்க மக்களின் வாழ்க்கை பாதிப்பு....
இந்த வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்கி பாதிக்கப்பட்டிருப்போர் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரே. இருப்பினும் சில வேலைகளில் கம்ப்யூட்டர்கள் புக முடியாது என்று கருதப்பட்டது. ஆனால் அதற்கும் பிரச்சினை வந்து விட்டதாம்.
எல்லாம் கணினி மயமாகும்....
இதனால் எதிர்காலத்தில் பாதுகாப்பான வேலை, இங்கெல்லாம் கம்ப்யூட்டர் புக முடியாது என்று கருதப்படும் வேலைகளும் கூட கிடைக்காத நிலை ஏற்படும் என்கிறார்கள்.
தொழில்நுட்ப ஆபத்து....
அமெரிக்காவில், கிட்டத்தட்ட 47 சதவீத வேலைகளுக்கு கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பத்தால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாம். கம்ப்யூட்டர்கள் இதுவரை பயன்படுத்தப்படாமல் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவர் ரோபோக்கள்...
குறிப்பாக போக்குவரத்துத் துறை, லாஜிஸ்டிக்ஸ் ஆகிய பிரிவுகளில் வேலைவாய்ப்பு அருகும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாம். குறிப்பாக டிரைவர்களே இல்லாமல் கார் ஓட்டும் நவீனம் புகத் தொடங்கி விட்டது. இது டிரைவர் வேலைக்கு உலை வைக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
அக்கவுண்ட்டண்ட்...
அதேபோல பாஸ்ட் புட் கவுண்டர்களில் பில் போடுவோர், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட் வேலை ஆகியவற்றிலும் முற்றிலும் கம்ப்யூட்டர்கள் புகுவதல் இந்த வேலைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாம்.
வேலைக்கு ரோபோக்கள் தேவை....
மேலும் பல்வேறு வேலைகளில் ரோபோட்களையும் ஈடுபடுத்த ஆரம்பித்திருப்பதால் பல வேலைகளுக்கும் ஆட்களை எடுப்பது குறையும் என்கிறார்கள்.