ஐஸ் பக்கெட்டை பிரபலமாக்கிய கோரி கிரிபின் நீரில் மூழ்கி பரிதாப பலி!
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள நான்டுகெட் என்னும் துறைமுகப்பகுதியில் உள்ள டைவிங் தளத்தில் விளையாடும் போதுதான் இத்துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
நேற்று முன்தினம் டைவிங் தளத்திலிருந்து நீரில் குதித்த கோரி தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி மரணமடைந்தார். அவருடைய வயது வெறும் 27 தான் என்பது குறிப்பிடத்தக்கது.
"அமையோட் ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ்" அதாவது ஏ.எல்.எஸ் என்ற முதுகுத்தண்டுவட நோய் குறித்த ஆராய்ச்சிக்காகவும், அந்த நோய் பாதித்த நோயாளிகளுக்காகவும் நிதி திரட்டுவதற்காக "ஐஸ் பக்கெட் சேலஞ்ச்" என்ற விளையாட்டை அறிமுகப்படுத்தினார்.
அதாவது, ஒரு பக்கெட் முழுவதும் உள்ள "சில்" என்ற நீரை அல்லது ஐஸ் கட்டிகளைத் தலையில் கொட்டிக் கொண்டு 10 டாலர்கள் நன்கொடை அளிக்க வேண்டும். மறுத்து பின்வாங்கினால், 100 டாலர்கள் நன்கொடையாக அளிக்க வேண்டும்.
அவர் பரப்பிய ஐஸ் பக்கெட் விளையாட்டில், பில் கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பக், ஓப்ரா வின்ஃபரே, முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் என பிரபலங்கள் பலர் பங்கேற்றதால் இந்த விளையாட்டு இணையத்தில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று பரவியது.
இதனால் உலக அளவில் முன்னணி பிரபலங்கள் பலர் ஆர்வமாக இந்த சவாலை ஏற்று விளையாடி வருகின்றனர் ஐஸ் பக்கெட்டை இந்த அளவிற்கு பிரபலப்படுத்திய பெருமை கோரி க்ரிபினையே சேரும். அவருடைய மறைவு கண்டிப்பாக அனைவரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்பது உண்மை.