சர்ச்சைக்குரிய தென்சீன கடற்பரப்பில் அமெரிக்கா போர்க் கப்பல்... பதிலடி தரப்போவதாக சீனா சீற்றம்!!
பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பரப்பில் அமெரிக்கா தமது போர்க் கப்பலை அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் பதிலடி கொடுக்கப்பதாக அறிவித்திருப்பது சர்வதேச அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்காசிய கடல்வழி வர்த்தகத்தில் தென்சீன கடல் பகுதி மிக முக்கியமான ஒன்றாகும். அத்துடன் இயற்கை எரிவாயு நிறைந்த கடற்பரப்பும் கூட.

இதனால் இந்த தென்சீன கடற்பரப்பு முழுவதையுமே தமக்கு சொந்தம் கொண்டாடுகிறது சீனா. ஆனால் வியட்னாம், மலேசியா, புரூனே, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளும் தென் சீன கடற்பரப்பில் தங்களுக்கும் உரிமை இருப்பதாக அறிவித்துள்ளன.
இதனிடையே தென்சீன கடற்பரப்பை கைப்பற்றும் வகையில் ஒரு செயற்கையான தீவை சீனா உருவாக்கி உள்ளது. இதில் ராணுவ விமானங்களை நிறுத்தும் விமான ஓடுதளத்தையும் சீனா அமைத்திருக்கிறது.
இந்த செயற்கையான தீவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில்தான் சர்ச்சைக்குரிய செயற்கைத் தீவுக்கு அருகே 12 நாட்டிகல் மைல் தொலைவில் அமெரிக்கா தனது போர்க்கப்பலை திடீரென அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். லாசன் என்ற போர்க் கப்பல் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் அப்பகுதிக்கு அமெரிக்காவின் போர்க் கப்பல் தற்போதுதான் நிறுத்தப்பட்டுள்ளது.
இது சீனாவை கொதிப்படைய வைத்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் கப்பல் கண்காணிக்கப்படுகிறது. சீனாவின் அனுமதியை பெறாமல் ஸ்ப்ராட்லி தீவு பகுதியில் அமெரிக்கா சட்டவிரோதமாக தனது கப்பலை நிறுத்தியுள்ளது.
இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடும் எந்தவொரு நாட்டுக்கும் சீனா உறுதியுடன் பதிலடி கொடுக்கும். தென் சீனக்கடல் பகுதியையும், வான்வெளியையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த தமது கண்டனத்தைத் தெரிவிக்க அமெரிக்கா தூதருக்கும் சீனா சம்மன் அனுப்பியுள்ளது. அதே நேரத்தில் கூடுதல் போர்க் கப்பல்களை அமெரிக்கா தென்சீன கடற்பரப்புக்கு அனுப்பி வைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன. அமெரிக்கா, சீனா இடையேயான இந்த மோதல் சர்வதேச அரங்கத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications