நெருங்கும் சூறாவளி.. ஹோட்டலில் சிக்கிய இந்திய வீரர்கள்.. உணவு கூட பேப்பர் பிளேட்டில் தான் போகிறதாம்
பார்படாஸ்: உலகக் கோப்பை டி20 தொடர் நிறைவடைந்து 2 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இந்தியர்கள் இன்னும் அங்கிருந்து திரும்பவில்லை. பார்படாஸை சூறாவளி தாக்கியதாலேயே இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு ஹோட்டலில் பணியாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றன. கடந்த சனிக்கிழமை இதன் இறுதிப் போட்டிகள் பார்படாஸில் நடைபெற்றது.

இதில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி டி20 கோப்பையைத் தட்டி தூக்கியது. ரோஹித் தலைமையிலான இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும்.
புயல்: அதேநேரம் இறுதிப் போட்டி முடிந்து 2 நாட்கள் ஆகிவிட்ட போதிலும், இன்னும் இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பவில்லை. பார்படாஸில் இப்போது ஏற்பட்டுள்ள சூறாவளி புயலே இதற்குக் காரணமாகும். இந்த கிரேடு 3 சூறாவளிக்கு பெரில் (Beryl) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சூறாவளி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
ஏர்போர்ட் மூடப்படுவதற்கு முன்பு தென்னாப்பிரிக்க அணி தனி விமானம் மூலம் அங்கிருந்து கிளம்பிவிட்டனர். அதேபோல இந்திய அணி பார்படாஸில் இருந்து நியூயார்க் சென்று அங்கிருந்து துபாய் வழியாக இந்தியா வரத் திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், இந்திய அணி கிளம்புவதற்குள் சூறாவளி தாக்கிவிட்டது. இதன் காரணமாகவே இந்திய அணிக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு விமானங்கள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்திய அணி தாயகம் திரும்புவதில் மேலும் காலதாமதம் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
பேப்பர் பிளேட்: இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணி தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. புயல் காரணமாக இந்திய வீரர்கள் ஹோட்டலில் சிக்கியுள்ள நிலையில், அவர்கள் வரிசையில் நின்று பேப்பர் பிளேட்டில் உணவு சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம்.
அதாவது இப்போது அனைத்து இந்திய வீரர்களும் பிரிட்ஜ்டவுனில் உள்ள ஒரே ஹோட்டலில் தான் உள்ளனர். இந்த ஹோட்டல் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் தான் பெரில் சூறாவளி கரையைக் கடக்கப் போகிறது. இதனால் வீரர்கள் யாரும் ஹோட்டலை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஹோட்டலிலும் பணியாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உணவு: இதன் காரணமாக அங்குள்ள இந்திய வீரர்கள் வரிசையில் நின்று உணவைப் பெற வேண்டிய சூழலே நிலவுகிறதாம். மேலும், மதிய உணவு மற்றும் இரவு உணவுகளை அவர்கள் பேப்பர் பிளேட்டில் வாங்கி சாப்பிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் பிரபல ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போதைய சூழலில் சூறாவளி கடுமையாக இருப்பதால் இந்தியர்கள் எப்போது தாயகம் திரும்பலாம் என்பதில் கேள்விக்குறியே நிலவி வருகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் சோகமடைந்தனர்.
எப்போது: அதேநேரம் எவ்வளவு சீக்கிரம் இந்திய அணியைத் தாயகம் அழைத்து வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அழைத்து வரவும் பிசிசிஐ முயற்சிகளை எடுத்து வருகிறது. சூறாவளி ஓய்ந்த உடனேயே சிறப்பு விமானம் மூலம் இந்திய வீரர்களை அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகளை பிசிசிஐ எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் சூறாவளி தாக்கம் எப்போது குறையும் என்பது உறுதியாக தெரியாததால் இந்திய வீரர்கள் எப்போது நாடு திரும்புவார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.












Click it and Unblock the Notifications