கோவில்கள் மீது தாக்குதல்.. இரவெல்லாம் காவல் காத்த மாணவர் - இஸ்லாமிய மதகுருமார்கள்! வங்கதேசத்தில்
டாக்கா: வங்கதேசத்தில் வன்முறை அரங்கேறிய நிலையில் பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டுக்கு தப்பி வந்துள்ளார். இந்நிலையில் தான் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் சூழலில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இஸ்லாமிய மதகுருமார்கள் கோவிலை சுற்றி அமர்ந்து காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் நேற்று பெரிய அளவில் வன்முறையாக மாறியது. இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டுக்கு வந்துவிட்டார். தற்போது வங்கதேசம் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. விரைவில் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து புதிய ஆட்சி அங்கு அமைய உள்ளது.

இந்நிலையில் தான் இடஒதுக்கீடு மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடந்த போராட்டம் என்பது தற்போது வகுப்புவாத பிரச்சனையாக மாறும் நிலை உருவாகி உள்ளது. பரசுராம் தானா அவாமி லீக் கட்சியின் இந்து கவுன்சிலரான ஹரதன் ராய் என்பவர் ரங்பூர் நகரில் 4வது வார்டு கவுன்சிலராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் ஏற்பட்ட வன்முறையில் கொலை செய்யப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக தான் வங்கதேசத்தின் பிற இடங்களில் உள்ள இந்து கோவில்கள், கலாசார மையங்கள் மற்றும் பிற சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர். இஸ்கான், காளி கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்து மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன.
அதாவது நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள கண்டிபாரா கிராமத்தில் உள்ள காளி மாதா கோவில் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இஸ்கான் கோவிலும் தீவைக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதோடு வகுப்புவாத வன்முறையாக மாறிவிடுமோ? என்ற பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனை பொதுமக்களும் உணர்ந்துள்ளனர். இதனால் வகுப்புவாத பிரச்சனையை தடுக்கும் முனைப்பில் பொதுமக்களில் ஒரு பகுதியினர் கோவில்களில் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர். தாகேஷ்வரி கோவிலை தாக்குதலில் இருந்து காக்க இரவு நேரத்தில் மாணவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்து கோவில்கள், கலாசார மையங்கள் உள்பட பிற சிறுபான்மை வழிபாட்டு தலங்களில் மாணவர்கள் இரவு நேரத்தில் கண்விழித்து காவல் காத்து வருகின்றனர்.
அந்த வகையில் குமில்லாவில் உள்ள இந்து கோவிலை முஸ்லீம் மதகுருமார்கள் தாமாக முன்வந்து பாதுகாத்தனர். கோவில் முன்பு சேர் போட்டு அமர்ந்து அவர்கள் இரவு முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் உபாசிலா என்ற இடத்தில் உள்ள கோவிலை இஸ்லாமிய சத்ர ஷிபிரின் மாணவர் பிரிவினர் பாதுகாத்து வருகின்றனர்.
மேலும் நாடு முழுவதும் பகுதி வாரியாக ‛மதநல்லிணக்கம் மற்றும் அரசு சொத்துகளை பாதுகாக்கும் குழு' அமைக்க மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த முன்முயற்சி தற்போது அனைவரிடமும் பாராட்டு பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications