'சைக்கோ' நர்ஸ்.. பச்சிளம் குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொன்ற கொடூரம்.. சினிமா பாணியில் கொலை!
பியுனோஸ் ஏர்ஸ்: அர்ஜெண்டினாவில் பிறந்து சில நாட்களே ஆன 8 பச்சிளம் குழந்தைகளை விஷ ஊசி செலுத்தி கொலை செய்த நர்ஸை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Recommended Video
அர்ஜெண்டினா நாட்டின் கோர்டோபா நகரில் 'நியோநாட்டல் மெட்டேர்னிட்டி' என்ற பெயரில் மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. மிகவும் பழமைவாய்ந்த மருத்துவமனையில் நாளொன்றுக்கு 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. இந்நிலையில், இந்த மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 2 குழந்தைகள் பிறந்த அடுத்த நாளே மர்மமான முறையில் இறந்து போயிருக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடத்திய போதிலும் இதற்கான காரணம் தெரியவரவில்லை.

பிறகு ஏதேனும் நோய்வாய்பட்டு குழந்தைகள் இறந்திருக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் முடிவுக்கு வந்தது. அதன் பின்னரும், ஒவ்வொரு மாதமும் இரண்டு குழந்தைகள் வீதம் இதுபோல் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. இதனால் அதிருப்தியடைந்த மருத்துவமனை நிர்வாகம் கடந்த மே மாதம் மகப்பேறு வார்டில் பணிபுரியும் 10 செவிலியர்களை 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்தது. அதன் பிறகு, அந்த செவிலியர்கள் வேலைக்கு வரத் தொடங்கினர். அதுவரை மருத்துவமனையில் எந்த குழந்தையும் இறந்து போகவில்லை. ஆனால் அந்த செவிலியர்கள் வேலைக்கு வந்த மூன்றாவது நாளே மற்றொரு குழந்தை இறந்து போனது. இதனால் மருத்துவமனை நிர்வாகத்துக்கு செவிலியர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
எனினும், மருத்துவர்கள், செவிலியர்கள் என யாருக்கும் தெரியாமல் பிறந்த குழந்தைகள் வைக்கப்பட்டிருக்கும் வார்டில் சிசிடிவி கேமராக்களை மறைவான இடங்களில் மருத்துவமனை நிர்வாகம் பொருத்தியது. இந்த சூழலில், கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி ஒரு பச்சிளம் குழந்தை இதுபோல இறந்து போனது. இதையடுத்து, அந்த சிசிடிவி கேமரா காட்சிகளை மருத்துவமனை ஆய்வு செய்த போது அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை கண்டு அவர்கள் நடுங்கி போயினர். கடந்த ஜனவரி மாதம் அந்த மருத்துவமனையில் புதிதாக செவிலியர் வேலைக்கு சேர்ந்த பிரெண்டா அக்யூரோ (27) என்பவர் நள்ளிரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அந்த வார்டுக்குள் நுழைந்து ஒரு குழந்தைக்கு ஏதோ ஊசி செலுத்துவதையும், அதன் பின்னர் அந்தக் குழந்தை துடிதுடித்து இறந்து போவதையும் அவர்கள் கண்டனர்.
பின்னர் இதுகுறித்து போலீஸாருக்கு மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்தது. இதன்பேரில், அங்கு வந்த போலீஸார் செவிலியர் பிரெண்டா அக்யூரோவை நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரையில் 8 பச்சிளம் குழந்தைகளை இதுபோல் விஷ ஊசி செலுத்திக் கொன்றதை பிரெண்டா ஒப்புக்கொண்டார். சிறு வயதில் மனதளவில் பெரிதாக பாதிக்கப்பட்டதால் பிரெண்டா சைக்கோவாக மாறியிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications