4-வது நாளாக நீடிக்கும் ஆர்மீனியா- அஜர்பைஜான் யுத்தம்: 3-வது உலகப் போர் தொடங்குகிறதோ?
யெரவான்: ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளிடையே 4-வது நாளாக யுத்தம் தொடருகிறது. ஆர்மீனியா, அஜர்பைஜான் யுத்தத்தை முன்வைத்து நாடுகள் அணிதிரள்வதைப் பார்த்தால் 3-வது உலகப் போர் தொடங்கிவிட்டதான சமிக்ஞையா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்தவை ஆர்மீனியா, அஜர்பைஜான். 1991-ல் சோவியத் ஒன்றியம் சிதைந்த போது ஆர்மீனியா, அஜர்பைஜான் இரண்டு தனித் தனி தேசங்களாகின.
ஆர்மீனியாவில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினர்; அஜர்பைஜானில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினர். அத்துடன் அஜர்பைஜான் எண்ணெய் வளம் மிக்க தேசமும் கூட. இந்த இரு தேசங்களின் எல்லையான நகோர்னோ-கராபக் மலைபிரதேசம் யாருக்கு என்பதில் பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது.
வருமான வரியை செலுத்த விரும்பவில்லை- டிரம்ப்.. கோமாளி, மோசமான அதிபர்- ஜோபிடன் விமர்சனம்
1994-ல் அமைதி ஒப்பந்தம்
சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்த காலம் முதலே இது தொடர்பாக ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் மோதலில் ஈடுபட்டன. தனித்தனி தேசங்களாக பிரிந்த நிலையில் 1994-ல் இருநாடுகளும் அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொண்டன. இந்த யுத்தத்தின் முடிவில் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக நகோர்னோ-கராபக் மலைப்பகுதியை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டது.
2016-ம் ஆண்டு முதல் மீண்டும் மோதல்
ஆர்மீனியர்கள் அதிகமாக வாழ்வதால் இது தங்களது தேசத்துக்குரியது என்பது ஆர்மீனியா அரசு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் நிலை. இதனால் 2016-ம் ஆண்டு முதல் மீண்டும் இருநாடுகளிடையே நகோர்னோ-கராபக் மலைப்பகுதியை முன்வைத்து பதற்றமும் மோதலும் உருவானது. இதுவரையில் நகோர்னோ-கராபக் மலைப்பகுதிக்கான யுத்தத்தில் 30,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
மீண்டும் யுத்தம் தொடங்கிவிட்டது
தற்போது புதியதாக இருநாடுகளிடையே 4 நாட்களாக யுத்தம் நடைபெற்று வருகிறது. இதில் பல நூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனைக்கும் ரஷ்யாவின் ராணுவ தளமும் ஆர்மீனியாவில் இருக்கிறது. ஆர்மீனியா- அஜர்பைஜான் யுத்தத்தில் துருக்கி, ஈரான், ரஷ்யா நாடுகள் தலையிட்டால் பல நாடுகளிலும் போர் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
3-வது உலகப் போர் தொடங்குகிறது?
இதுவே 3-வது உலகப் போருக்கான தொடக்கமாகவும் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் முஸ்லிம்கள் நாடான அஜர்பைஜானை துருக்கி ஆதரிக்கிறது. பாகிஸ்தானும் உதவிக்கரம் நீட்டுகிறது. ஆர்மீனியர்கள் அதிகம் வாழுகிற பிரான்ஸ், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கிறது. இதேபோல் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறது. ஐக்கிய நாடுகள் சபையும் இது குறித்து கவலை தெரிவித்துள்ளது. இருநாடுகளையும் எல்லையாகக் கொண்ட ஈரானோ நடுநிலையாளராக இருந்து பேச்சுவார்த்தையை முன்னெடுக்கிறோம் என்கிறது. இப்படி உலக நாடுகள் மெல்ல மெல்ல அர்மீனியா, அஜர்பைஜான் அணிகளாக பிரிய தொடங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.