உச்சக்கட்டத்தில் உக்ரைன் போர்! ராஜினாமா செய்த முக்கிய அமைச்சர்கள்! புதிய வியூகம் வகுக்கும் ஜெலன்ஸ்கி
கீவ்: உக்ரைன்-ரஷ்யா போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உக்ரைனை் அமைச்சர்கள் உட்பட 6 முக்கிய அதிகாரிகள் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார்கள். உக்ரைன் அமைச்சரவை மாற்றப்படும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அப்படி இருக்கையில், இந்த ராஜினாமா நடந்திருக்கிறது.
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளை கடந்து உக்ரைன்-ரஷ்யா போர் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த போர் உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. குறிப்பாக, உக்ரைன் படைகள் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவும் களத்தில் வெறியாட்டம் ஆடி வருகிறது.

இந்த சூழலுக்கு இடையில், உக்ரைன் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே, முக்கிய அமைச்சர்கள் உட்பட 6 பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளனர். குறிப்பாக தொழில்துறை அமைச்சர் அலெக்சாண்டர் கமிஷின், சட்டத்துறை அமைச்சர் மந்திரி டெனிஸ் மாலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ருஸ்லான் ஸ்ட்ரைலெட்ஸ் ஆகியோரின் ராஜினாமா பெரும் கவனம் பெற்றிருந்தது.
போருக்கு தேவையான ஆயுதங்கள் பெரும்பாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்துதான் உக்ரைன் பெறுகிறது. ஆனால், சமீபத்தில் பிரிட்டன் சில ஆயுதங்களை, உக்ரைனுக்கு வழங்க மறுத்துவிட்டது. இதனால் ஆயுத உற்பத்தியை உக்ரைன் அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இப்படி இருக்கும்போது தொழில்துறை அமைச்சர் திடீரென ராஜினாமா செய்திருப்பது பெரும் சலசலப்பை கிளப்பியிருக்கிறது.
அடுத்தடுத்த நாட்களில் அமைச்சரவையில் 50% மாற்றங்கள் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாற்றம் குறித்து உக்ரைன் எதிர்க்கட்சி தலைவர் இரினா ஜெராஷ்சென்கோ கூறுகையில், "அமைச்சர்கள் இல்லாத, தனிப்பெரும்பான்மை இல்லாத அரசாக உக்ரைன் இருக்கிறது. அதிகாரிகள் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார். மறுபுறம், பழைய அமைச்சர்களை நீக்கிவிட்டு, போரை தீவிரப்படுத்தும் விதமாக புதிய வியூகம் வகுத்து களத்தில் ஜெலன்ஸ்கி இறங்கியுள்ளார் என சிலர் கூறுகின்றனர்.
போருக்கான காரணம்: சோவியத் காலத்தில் அதற்கு போட்டியாக உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ. ஆனால், சோவியத் உடைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னமும் நேட்டோ விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதுதான் ரஷ்யா-உக்ரைன் போருக்கான தொடக்கப் புள்ளி. கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு நோக்கி தனது ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொண்டே வந்த அமெரிக்காவின் நேட்டோ, கடைசியாக உக்ரைனுக்கு வந்து நின்றது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஆதரவாளர். எனவே, நேட்டோவுக்கு அனுமதியளித்தார்
இது ரஷ்யாவுக்கு எரிச்சலை கிளப்பியது. உக்ரைன் ரஷ்யாவுக்கு பக்கத்தில் உள்ள நாடு. ஏற்கெனவே ரஷ்யாவுக்கும் அமெரிக்காவும் ஏழரை சனி. இப்படி இருக்கும்போது உக்ரைன், நேட்டோவில் இணைந்துவிட்டால் நேட்டோ பெயரில் அமெரிக்க படைகள் நேரடியாக ரஷ்ய எல்லையில் குவிக்கப்படும். இது ரஷ்யா பெரும் அச்சுறுத்தல். எனவே ரஷ்யா போரை அறிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த போர் தொடங்கியது.
2 வாரங்கள்தான் போர் நீடிக்கும் என்று ரஷ்யா சொன்னது. ஆனால், அமெரிக்கா கொடுத்த ஆயுத உதவியால் 2 ஆண்டுகள் கடந்து இப்போதுவரை உக்ரைன்-ரஷ்யா போர் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications