ஆங் சான் சூகி சிறை வைக்கப்பட்டிருந்த வீட்டின் ‘54ம் நம்பர் கதவு’ ஏலம்!
நைப்பியதா: மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான ஆங் சான் சூகியின் வீட்டு இரும்புக் கதவு ஏலம் விடப்பட உள்ளது.
லண்டனில் இருந்து 27 ஆண்டுகளுக்கு முன்பு மியான்மர் திரும்பிய சூகி, தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். சுமார் 15 ஆண்டுகாள் அங்கு அவர் வீட்டுச்சிறை வைக்கப் பட்டார்.
அந்த காலகட்டங்களில் அவ்வப்போது சூகி தனது வீட்டின் முன் உள்ள இரும்பு வாயிற்கதவுக்கு முன் மேஜை போட்டு, அதில் ஏறி உரையாற்றுவதுண்டு. அப்போது அரசின் ஊழல், கல்வித்தரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து சூகி பேசுவார்.

சூகி விடுதலையானதைத் தொடர்ந்து அந்த வீடு பழுது பார்க்கப் பட்டது. அப்போது சூகி உரையாற்றும் அந்த 54 என்ற எண் இடப்பட்ட வாயிற்கதவு தூக்கி கடாசப்பட்டிருந்தது. காயலான் கடையில் அதைக் கொடுத்து விட திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து அந்தக் கதவை சில நூறு டாலர்கள் கொடுத்து சூ நையூண்ட் என்பவர் விலைக்கு வாங்கினார்.
தற்போது, அந்தக் கதவை அவர் ஏலம் விட முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். கதவின் ஆரம்ப விலையாக ஒரு கோடியே 23 லட்சம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்த ஏலம் மூலம் கிடைக்கும் தொகையை சூகியின் 'ஜனநாயகத்துக்கான தேசிய அமைப்பு' (என்.எல்.டி.) கட்சிக்கு ஒரு தலைமைக் கட்டிடம் கட்டுவதற்கு வழங்கவும் நையூண்ட் திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications