ஆஸ்திரேலிய முகாமில் இருந்து நலிவுற்ற ஈழத் தமிழ் சிறுவர்- சிறுமிகளை விடுவிக்க கோரிக்கை
மெல்போர்ன்: பசிபிக் பெருங்கடலின் நவுறு தீவு முகாமில் அகதிகளாக அடைக்கப்பட்டு நலிவுற்ற நிலையில் இருக்கும் ஈழத் தமிழர் சிறுவர்களை உடனே ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு ஆஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைய பெருந்துயரங்களுக்கு மத்தியில்மீன்பிடிப் படகில் செல்வது உண்டு. அப்படி சென்ற 157 பேரை ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் கொடுக்காமல் பசிபிக் தீவுகளுக்கு நடுவே உள்ள நவுறு என்ற தீவில் உள்ள முகாமில் அடைத்து வைத்துள்ளனர்.

அடிப்படை வசதிகளற்ற இம்முகாமில் தமிழ் அகதிகள் கடுமையான துயரத்துக்குள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த முகாமில் உள்ள சிறுவர்களை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வந்து மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் தமிழ் அகதிகள் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
4 வயது சிறுமி ஃபெப்ரினா உட்பட 157 தமிழர்கள் தஞ்சம் கோரி வந்த படகை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆஸ்திரேலியா அதிகாரிகள் ஒரு மாதம் தடுத்து வைத்தனர். அவர்களை இலங்கைக்கோ அல்லது இந்தியாவுக்கு திருப்ப அனுப்பாமல் தாமதித்து வந்தது ஆஸ்திரேலியா அரசு.
அதன் பின்னரே நவுறு முகாமுக்கு அவர்கள் அனைவரையும் ஆஸ்திரேலியா அரசு அனுப்பியது. இவர்களில் 37 பேர் சிறுவர்கள். இந்த சிறுவர்கள் போதுமான உணவு உள்ளிட்ட கவனிப்பு இல்லாமல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக முகாமில் இருக்கும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சிறுமி ஃபெப்ரினாவின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டு 15% அளவுக்கு எடை குறைந்துள்ளடு. அவரது உடல்நிலை அடிக்கடி மிக மோசமாக பாதிக்கப்பட்டு பல நேரங்களில் தனிமையாகத்தான் வைக்கப்பட்டிருக்கிற நிலைமையில் இருக்கிறார். இதே நிலைமையில் பல சிறுவர்களும் இருக்கின்றனர்.
இப்படி நவுறு முகாமில் இருக்கும் ஒவ்வொரு சிறாரது நிலைமையும் எதிர்காலமும் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. இந்த மோசமான நிலைமைக்கு ஆஸ்திரேலியா அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் அனைவரையும் ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டு வந்து உடனடியாக மறுவாழ்வுப் பணிகளை இத்தனை தாமதத்துக்கு பின்னராவது வழங்க வேண்டும்.
இது ஒரு மனிதாபிமான பிரச்சனை என்பதை ஆஸ்திரேலியா அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications