இப்படி ஒரு காரணமா? ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரை புறக்கணித்த ஆஸ்திரேலியா..‛‛சபாஷ்’’ குவியும் பாராட்டு
மெல்போர்ன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாட இருந்த நிலையில் திடீரென்று விலகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக தாலிபான்கள் தொடர்ந்து பல்வேறு அடக்குமுறையை செயல்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கு ஆஸ்திரேலியா அரசு உள்பட பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2021ல் வெளியேறின. இதையடுத்து தாலிபான்கள் உள்நாட்டு போரை துவங்கி நாட்டை கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆகஸ்டில் இருந்து தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. 1996 முதல் 2001 வரை ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்த நிலையில் தற்போது 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளனர்.
வேலையை காட்டிய தாலிபான்.. இனி படிக்கவே கூடாது.. மூடப்பட்ட பல்கலை. கதவுகள்.. கதறி அழும் பெண்கள்!
பெண்களுக்கு கட்டுப்பாடுகள்
தாலிபான்கள் மதத்தின் அடிப்படையில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதை வாடிக்கையாக கொண்டவர்கள். தற்போதும் அது தொடர்கிறது. பெண்கள் பொதுவெளியில் தனியாக நடமாடக்கூடாது, வேலைக்கு செல்லக்கூடாது. தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் புர்கா அணிய வேண்டும். பூங்கா ஜிம் செல்ல தடை, ஓட்டல்களில் ஆண், பெண்கள் சேர்ந்து உணவருந்த தடை, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழங்களில் பெண்களுக்கு படிக்கவும், என்ஜிஓக்களில் பணியாற்றவும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை பெறவும் தடை
மேலும் சில நாட்களுக்கு முன்பு ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்கள் செல்லக்கூடாது என மிகவும் பிற்போக்கு தனமான உத்தரவை பிறப்பித்துள்ளன. மேலும் உத்தரவுகளை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்பதால் பெண்களும் பயந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் உள்ளது. இதனை பல நாடுகள் கண்டித்தாலும் கூட தாலிபான்கள் தங்கள் நடவடிக்கையை மாற்றி கொள்ளவில்லை.
கிரிக்கெட்டை புறக்கணித்த ஆஸ்திரேலியா
இந்நிலையில் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் மாதம் விளையாட திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த தொடரில் இருந்து ஆஸ்திரேலியா பின்வாங்கி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களின் கல்விக்கும், வேலை வாய்ப்புக்கும் மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க ஆஸ்திரேலியாவின் பிக்பாஸ் தொடரில் இருந்து ஆப்கன் வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குவியும் பாராட்டு
இந்நிலையில் தான் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் இந்த முடிவை அந்நாட்டின் விளையாட்டுத்துறைஅமைச்சர் அனிகா வெல்ஸ் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியை புறக்கணித்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் இந்த முடிவை அரசு வரவேற்கிறது. ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் முதல் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது நிச்சயம் வரவேற்கக்கூடியது. தாலிபான்கள் அங்குள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளை பொதுவாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது'' என பாராட்டு தெரிவித்துள்ளார். இதபோல் பிற மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமைகள் சார்ந்த அமைப்பினர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.