காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு- ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் போராட்டம்
காவிரி பிரச்னைக்காவும், தூத்துக்குடி மக்களுக்காகவும் ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர்.
Recommended Video
விக்டோரியா : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், மக்களின் அறவழிப்போராட்டத்திற்கு பிறகும் ஸ்டெர்லைட் ஆலையை மூடாத தமிழக அரசைக் கண்டித்தும் ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் கண்டன போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. அதே போல், மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
உலகத் தமிழர்களும் தங்களால் இயன்ற அளவிற்கு இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். இங்கிலாந்து, துபாய் போன்ற நாடுகளில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டம் நடந்தது.
இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் விக்டோரியா பார்லிமெண்ட் வளாகத்தின் முன்பு மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் போராட்டம் நடத்தினர்.
அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்.