மோசமான வானிலை... ஏர் ஏசியா விமானப் பயணிகளின் உடல்களை மீட்கும் பணி தொய்வு!
ஜகார்த்தா: மோசமான வானிலை நிலவுவதால் விபத்தில் சிக்கிய ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த 28ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற ஏர் ஏசியா விமானம் ஒன்று ஜாவா கடல் பகுதிக்கு மேலே பறந்த போது மாயமானது.
மாயமான விமானத்தைத் தேடும் பணியில் இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 கப்பல்கள், 15 விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில், நேற்று இந்தோனேசிய கடல் பகுதியில் மாயமான விமானத்தின் பாகங்களும், பயணிகளின் உடலும் மிதப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து மீட்புப் பணியில் 30க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஈடுபட்டன.
மீட்புப் பணியில் தொய்வு:
இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தொடர்ந்து அப்பகுதியில் கடும் மழை மற்றும் சீற்றமான அலைகள் என மோசமான வானிலை நிலவுவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்தோனேசிய கடற்படை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடல் அலைகள் ஆக்ரோஷமாக இருப்பதால் உடல்கள் சில மைல் தொலைவில் ஆங்காங்கே மிதக்கின்றன. அவற்றை மீட்டு வருகிறோம்.
விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சுகிறோம், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. விமானத்தின் பெரும் பகுதி கடலில் மூழ்கியிருப்பதால் அதனை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட உடல்கள் அருகில் உள்ள பங்காலான் பன் நகருக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு உடல்களை அடையாளம் காண்பதற்காக பயணிகளின் உறவினர்கள் அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.
இரங்கல்:
உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடா, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாயமான விமானம் குறித்த தகவல்களை அறிவதற்காக இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையம், சிங்கப்பூர் விமான நிலையத்தில் நூற்றுக் கணக்கான உறவினர்கள் திரண்டிருந்தனர்.
விமானம் விபத்தில் சிக்கிய தகவல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுரபயா விமான நிலையத்தில் கூடியிருந்த பயணிகளின் உறவினர்கள் கதறி அழுந்தனர். மயங்கி விழுந்த சிலர் மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டனர்.
சுரபயா விமான நிலையம் வந்த மேயர் டிரி ரிஸ்மகாரனி மற்றும் அரசு உயரதிகாரிகள் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி தேற்றினர்.
விமானிகளின் தவறே:
அபாய பகுதியான ஜாவா கடல் பகுதியில் விமானத்தை செலுத்தியதே விபத்திற்குக் காரணம் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விமான போக்குவரத்துத் துறை நிபுணர் நேல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்பு குறைவு என அவர் கூறியுள்ளார்.
எனினும் விமானத்தின் கருப்பு பெட்டியைக் கண்டுபிடித்த பின்னரே விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய ஏர் ஏசியா விமானத்தை இந்தோனேசியாவை சேர்ந்த விமானி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஆகியோர் இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.