வங்கதேசத்துக்கு ஆப்பு..பொருளாதாரத்தை முடக்கிப்போடும் இந்தியா..முகமது யூனுஸின் ஆணவத்துக்கு சவுக்கடி
டாக்கா: இந்தியா - வங்கதேசம் இடையே மோதல் இருந்து வருகிறது. சீனாவில் நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பேசியது சர்ச்சையானது. இதையடுத்து நம் நாட்டின் நில சுங்கங்களை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய வங்கதேசத்துக்கு கொடுக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதனால் வங்கதேசம் கதற தொடங்கி உள்ள நிலையில் மத்திய அரசு வைத்த ஆப்பு வங்கதேசத்தின் பொருளாதாரத்தையே முடக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. அது எப்படி? வாங்க பார்க்கலாம்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இடதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையானது. இதையடுத்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம்நாட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

முகமது யூனுஸ் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். அதோடு பாகிஸ்தான், சீனாவுடன் இணைந்து நம்மை சீண்டி வருகிறார். இதனால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த 7 மாதமாக இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு என்பது மோசமாகி உள்ளது.
சமீபத்தில் சீனா சென்ற முகமது யூனுஸ், நம் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து பேசினார். வங்கதேசத்தில் கடல் உள்ளது. இதனால் வங்கதேசத்தில் வர்த்தகம் தொடங்க சீனா முன்வர வேண்டும் என்று கூறினார். அதோடு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அதுபோன்ற வசதிகள் இல்லை எனவும், வங்கதேசத்தில் வர்த்தகம் செய்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை அவர் மறைமுகமாக பேசியிருந்தார்.
இதற்கு நம் நாடு எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமின்றி இந்தியா வழியாக நிலச்சுங்கங்கள் மூலம் பூடான், மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்தது. இந்த அனுமதியை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தியது. இது தற்போது வங்கதேசத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சொல்லப்போனால் வங்கதேசத்தின் பொருளாதாரத்தையே முடக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதுபற்றிய விபரம் வருமாறு:
வங்கதேசத்தை எடுத்து கொண்டால் அங்கு ஜவுளித்துறை தான் முக்கிய வர்த்தகமாக உள்ளது. இதுதான் வங்கதேசத்தின் முதுகெலும்பாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வங்கதேசத்தில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களில் ஜவுளிகள் தான் அதிகம். அதாவது ஏற்றுமதிமாகும் பொருட்களில் 85 சதவீதம் ஜவுளிகள் தான். இது அந்த நாட்டின் ஜிடிபியில் 13 சதவீதமாக உள்ளது. மொத்தம் 40 லட்சம் மக்கள் இந்த ஜவுளித்துறையை நம்பித்தான் உள்ளனர். குறிப்பாக ஏராளமான பெண்கள் இந்த துறையில் பணியாற்றி வருகின்றனர்.
இப்போது நம் நாட்டின் விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வங்கதேசத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நாட்டின் ஏற்றுமதி என்பது பாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த வன்முறையில் ஜவுளி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்போது நம் நாட்டின் அதிரடியால் இன்னும் அந்த நாட்டின் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட உள்ளது. வங்கதேசத்தில் இருந்து இந்தியா வழியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும், பக்கத்தில் உள்ள மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது இந்த நாடுகளுக்கு பொருட்களை அனுப்ப வங்கதேசம் மாற்று வழியை தேடிவருகின்றனர். வங்கதேச துறைமுகம் மற்றும் விமானத்தில் இருந்து பொருட்களை அனுப்புவதிலும் பெரும் சிக்கல் உள்ளது.
ஏனென்றால் வங்கதேசத்தின் துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் அதிகமான பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் இல்லை.
அதுமட்டுமின்றி ஒரு பொருளை கொல்கத்தாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால் கிலோவுக்கு 2 டாலர் முதல் 2.5 டாலர் வரை செலவாகும். அதேவேளையில் வங்கதேசத்தில் இருந்து கப்பல் மூலம் ஏற்றுமதி செய்யும்பட்சத்தில் ஒரு கிலோவுக்கு 5 டாலர் முதல் 6 டாலர் வரை செலவாகும். இது ஏற்றுமதியாளர்களை வெகுவாக பாதிக்கும். இதனால் பொருட்களின் விலையை வெளிநாடுகளில் உயர்த்தி விற்பனை செய்ய வேண்டி இருக்கும். இதனால் அங்குள்ள மக்கள் வேறு நாடுகளின் பொருட்களை வாங்க நினைப்பார்கள். இதனால் தற்போது இந்தியாவின் நடவடிக்கை என்பது மொத்த வங்கதேசத்தின் பொருளாதாரத்தையும் முடக்கும் வகையில் உள்ளது.
கொரோனா காலத்தில் பல நாடுகளின் வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டன. அப்போது வங்கதேசமும் பெரும் பாதிப்பை சந்தித்தது. அந்த சமயத்தில் வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார். அவர் கேட்டு கொண்டதன் அடிப்படையில் நம் நாட்டின் நில சுங்கங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு விமான நிலையம், துறைமுகங்கள் வழியாக வங்கதேசத்தின் பொருட்கள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதோடு முகமது யூனுஸ் நம் நாட்டை சீண்டி வருகிறார். இப்படியான சூழலில் தான் நம் நாட்டின் நிலச்சுங்கங்ள் மூலம் விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்டவற்றை வங்கதேசம் பயன்படுத்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications