"ஆப்ரேஷன் கங்காவில்" வங்கதேச மாணவர்களையும் மீட்ட இந்தியா.. மோடிக்கு நன்றி சொன்ன ஷேக் ஹசீனா
டாக்கா: ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் தவித்த 9 வங்கதேச மாணவர்களையும் இந்தியா பத்திரமாக மீட்டு வந்துள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு, வங்கதேச பிரதமர் செய்க் ஹசீனா நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனா்ல அங்கு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை மேற்கொள்ளும் இந்திய மாணவர்கள் உள்பட ஆசியாவின் பிற நாடுகள், ஆப்பிரிக்க நாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
போருக்கு நடுவே இந்தியர்களை பத்திரமாக மீட்க மத்திய அரசு முடிவு செய்தது. போர் துவங்கிய பிப்ரவரி 24 முதல் உக்ரைன் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் இந்திய மாணவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

ஆபரேஷன் கங்கா
இதையடுத்து மத்திய அரசின் ‛ஆபரேஷன்' கங்கா மூலம் உக்ரைனில் இருந்து வெளியேறும் இந்திய மாணவர்கள் தனியார், இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியாவின் புக்காரெஸ்ட், ஹங்கேரியின் புத்தாபெஸ்ட், போலந்தின் ரிசோ, சுலோவாகியாவின் கோசிஸ் நகர்களில் இருந்து விமானங்களில் தாயகம் திரும்புகின்றனர். மீட்பு பணிகளை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி ஹங்கேரியிலும், ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியாவிலும், கிரண் ரிஜிஜூ சுலோவாகியாவிலும், வி.கே.சிங் போலந்திலும் ஒருங்கிணைப்பு செய்து வருகின்றனர்.

வங்கதேசம் நன்றி
ஆபரேஷன் கங்கா மூலம் இந்தியா மட்டுமின்றி வங்கதேசம், நேபாளம், வடஆப்பிரிக்கா நாடான துனிசியா மாணவர்களையும் இந்தியா மீட்டதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. குறிப்பாக உக்ரைனில் தவித்த 9 வங்கதேச மாணவர்களை இந்தியா மீட்டது. இந்தியர்களுடன் சேர்ந்து பிற நாட்டு மாணவர்களை மீட்கும் செயலுக்கு பல்வேறு தரப்பினர் இந்தியர்களை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் வங்கதேச மாணவர்கள் 9 பேரை மீட்டதற்கு அந்நாட்டு பிரதமர் செய்க் ஹசீனா பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய தேசியக்கொடி
முன்னதாக உக்ரைனில் இருந்து இந்திய தேசியக்கொடியை பயன்படுத்தி இந்திய மாணவர்கள் போருக்கு மத்தியில் வெளியேறி வந்தனர். இதேபோல் அண்டை நாடான பாகிஸ்தான் உள்பட பிற நாட்டு மாணவர்களும் இந்திய தேசியக்கொடியை பயன்படுத்தி உக்ரைனில் இருந்து வெளியேறினர். இதுதொடர்பான வீடியோக்கள், மாணவர்களின் பேட்டி தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.
Recommended Video

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இதை பாஜகவினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். மேலும், உலக நாடுகள் உடனான பிரதமர் நரேந்திர மோடியின் நல்லுறவால் தான் போர் சமயத்திலும் மாணவர்களை மீட்க முடிகிறது என அவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் தெரிவித்தனர். முன்னதாக உக்ரைனில் இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications