ஒட்டுமொத்த ராஜபக்சே குடும்பமும் கூடி 'சதி' ஆலோசனை- 'தப்பி ஓட'முயன்ற பசில் ஜனாதிபதி தேர்தலில் போட்டி?
கொழும்பு: இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சே குடும்பத்தின் பசில் ராஜபக்சே போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அக்டோபர் 10-ந் தேதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் போனால் இலங்கை மக்கள் மீண்டும் வீதிகளில் இறங்கி போராட்டத்தை நடத்தக் கூடும் என்கிற அச்சமும் நிலவுகிறது.

இந்த நிலையில் துக்க நிகழ்வு ஒன்றுக்காக மகிந்த ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த அத்தனை 'தலைகளும்' ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாம்.
இந்த விவாதங்களின் முடிவில்தான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக அதிபர் தேர்தலில் பசில் ராஜபக்சேவை களமிறக்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இலங்கை அரசியலில் ராஜபக்சே குடும்பத்தினர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய, பிரதமராக மகிந்த ராஜபக்சேக்கள் பதவி வகித்த காலம் இருந்தது. ஆனால் இலங்கை திவாலானதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த போது கோத்தபாய, மகிந்த ராஜபக்சே உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டே தப்பி ஓடினர். தங்களது பதவிகளையும் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது தீவிர அரசியலில் ராஜபக்சேக்கள் ஒதுங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில்தான் ராஜபக்சே குடும்பத்தினர் ஒன்று கூடி சதி ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில்தான் பசில் ராஜபக்சேவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளனராம்.
இதே பசில் ராஜபக்சேதான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது அமெரிக்காவுக்கு தப்பி செல்ல முயன்றார். அப்போது விமான நிலையத்தில் போராட்டக்காரர்களால் பசில் ராஜபக்சே சுற்றி வளைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அதாவது பசில் ராஜபக்சே அமெரிக்கா குடியுரிமை பெற்றவராக இருந்ததால் இலங்கையை விட்டு தப்பி ஓட முயன்றார். அப்படியான பசில் ராஜபக்சேவையே இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அதிபர் வேட்பாளராக நிறுத்தலாம் என ராஜபக்சே குடும்பம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications