ஐஎஸ்ஐஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்து வந்த கர்நாடக நபர் துபாயில் கைது
துபாய்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு டிவிட்டர் மூலமாக ஆள் சேர்த்து வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த நபர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அட்னான் தமுடி என்ற அந்த நபர் கர்நாடக மாநிலம் பத்கல் நகரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 2012ம் ஆண்டு துபாய்க்கு இடம் பெயர்ந்தார். அங்கு அக்கவுண்டன்ட் ஆக வேலை பார்த்து வந்தார்.
இவரது செயல்பாடுகள் இந்திய உளவுத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இவரைக் கண்காணிக்குமாறு துபாய் போலீஸாருக்கு இந்திய உளவு அமைப்பு தகவல் கொடுத்தது. அதன் பேரில் அட்னான் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். அவரது சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டன. அதில் அவர் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்ததும், இந்தியர்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்ப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து தற்போது அட்னான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் @adnandamudi என்ற டிவிட்டர் கணக்கை செயல்படுத்தி வந்தார். அதில் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான பிரசாரம் மேலோங்கியிருந்தது. மேலும் இந்தியர்கள் பலரை இவர் ஆசை வார்த்தை கூறி ஐஎஸ் அமைப்பில் சேர்த்து வந்ததும் தெரிய வந்தது. தெலுங்கானா மாநிலத்தைத்தான் இவர் அதிகமாக குறி வைத்திருந்தாராம்.
தற்போது இவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வர இந்திய உளவுத்துறையினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இவரது கைது குறித்த தகவல்களை இந்திய உளவு அமைப்புகள் துபாயிடம் கோரியுள்ளன.
இவர் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டால் பல முக்கியத் தகவல்கள் நமக்குத் தெரிய வரும் என உளவு அமைப்புகளும், சிபிஐயும் நம்புகின்றன. மேலும் இந்தியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் குறித்த தெளிவும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.