சவுதியில், அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப்படைத் தாக்குதல்... தீவிரவாதி பலி, 2 அதிகாரிகள் காயம்
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் காயம் அடைந்தனர்.
ஜெட்டாவில் உள்ள அமெரிக்க தூதரம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்க தூதரகம் அருகே சந்தேகப்படும் படி ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நபரிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை நெருங்கியுள்ளனர். அப்போது அந்த நபர் தனது உடலில் கட்டிவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த குண்டு வெடிப்பில் அந்த தீவிரவாதி உயிரிழந்தான். பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் காயம் அடைந்தனர்.
எந்த ஒரு இயக்கமும் இந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. இன்று அமெரிக்க சுதந்திர தினம் என்பதால், அதனை கொண்டாட தூதரக அதிகாரிகள் ஏற்பாடு செய்து வந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதே தூதரகத்தில் கடந்த 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.