யு.எஸ்.: நாய்க்குட்டியை தர மறுத்த 8 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற 11 வயது சிறுவன்
சிகாகோ: அமெரிக்காவில் நாய்க்குட்டியை தர மறுத்த 8 வயது சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த 11 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவின் டென்னிஸி மாநிலத்தில் உள்ள ஒயிட் பைன் நகரைச் சேர்ந்தவர் லடாஷா டயர். அவரின் மகள் மெக்கைலா(8). மெக்கைலா நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்க்குட்டியை பார்த்துவிட்டு தருகிறேன் என்னிடம் கொடு என பக்கத்து வீட்டில் வசிக்கும் 11 வயது சிறுவன் அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு மெக்கைலா மறுத்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்குள் சென்ற சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து மெக்கைலாவின் மார்பில் சுட்டார். இதில் மெக்கைலா பரிதாபமாக உயிர் இழந்தார். போலீசார் சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் தாய் லடாஷா கூறுகையில்,
நாங்கள் ஒயிட் பைன் நகருக்கு மாற்றலாகி வந்ததில் இருந்து அந்த சிறுவன் மெக்கைலாவை சீண்டிக் கொண்டே இருந்தான். அவர்கள் இருவரும் ஒரே பள்ளி என்பதால் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தேன். அதன் பிறகே சிறுவன் அமைதியாக இருந்தான். இந்நிலையில் என் மகளை சுட்டுக் கொலை செய்துவிட்டான்.
என் மகள் எனக்கு வேண்டும். உங்கள் குழந்தைகளை ஒவ்வொரு இரவும் கட்டிப்பிடித்து முத்தமிடுங்கள். ஏனென்றால் மறுநாள் அவர்களுடன் நாம் இருப்போமா என்பது தெரியாது என்றார்.












Click it and Unblock the Notifications