அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம் ஓரம்போ.. இறங்கி அடிக்கும் BRICS! தொழிற்புரட்சி 4.O இதோ!
வியன்னா: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான வளர்ச்சியை எட்டுவதற்காக பிரிக்ஸ் நாடுகள் 'BCIC' எனும் அமைப்பை உருவாக்கியுள்ளன. இதன் மூலம் தொழில்துறையில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இம்மாற்றத்தால் இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சி வேகமெடுக்கும்.
பிரிக்ஸ் நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்படுவதன் மூலம் ஆசியாவை தொழில் மற்றும் உற்பத்தி துறையின் மையமாக மாற்ற முடியும் என்று நிபுணர்களும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.

பிரிக்ஸ் நாடுகளின் பலம்
சமீபத்தில் ஆஸ்திரியா நாட்டு தலைநகரான வியன்னாவில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடியிருந்தனர். அதில்தான் தொழில்துறையை வளர்ச்சியை வேகப்படுத்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது உலக அளவில் 40%க்கும் அதிகமான மக்களை பிரிக்ஸ்+ நாடுகள் கொண்டிருக்கின்றன. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜிடிபி) 35% அதிகமாக இந்த நாடுகளிலிருந்துதான் கிடைக்கிறது. இதனை அதிகரிக்க இந்த நாடுகளிடையே ஒருங்கிணைப்பு அவசியம்.
வளர்ச்சிக்காக புதிய அமைப்பு
இதற்காகவே BCIC (BRICS Centre for Industrial Competencies) தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பின் வேலை பிரிக்ஸ்+ நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளை நவீனப்படுத்துவதுதான். அதாவது எதிர்காலத்திற்கு ஏற்றவாறு இந்த தொழிற்சாலைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். மேலும் தொழில்நுட்ப மாற்றங்கள், தொழில்துறை டிஜிட்டலைசேஷன், நவீன தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்டவற்றிலும் BCIC கவனம் செலுத்துகிறது.
சிறு குறு தொழில் நிறுவனங்கள்
மிக குறிப்பாக சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) சர்வதேச சந்தையை அணுகும் வாய்ப்பை அளிக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் சிறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சியை எட்டும்போது அது ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியை கொடுக்கிறது. இந்த மாற்றத்தை செய்ய ரஷ்யாவும், சீனாவும் முக்கிய பங்காற்ற இருக்கின்றன. மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறையில் எட்டப்பட்டால் தொழிற்துறை வளர்ச்சி என்பது 4.O என்கிற நிலையை அடையும்.
தொழில்துறை வளர்ச்சி
உலகில் முதல் தொழில்துறை வளர்ச்சி (1.O) 18ம் நூற்றாண்டில் ஏற்பட்டது. அந்த காலத்தில் நீராவி என்ஜின்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனையடுத்து 19ம் நூற்றாண்டில் தொழில்துறை வளர்ச்சி 2.O எனும் கட்டத்தை எட்டியது. இந்த காலத்தில்தான் மின்சாரம் பயன்பாட்டுக்கு வந்தது. அதற்கு முன்னர் வரை தேவைக்கு மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு வந்திருந்தது. ஆனால் 2.O காலத்தில் வணிகத்திற்காக உற்பத்தி நடைபெற்றது. கடைசியாக 20ம் நூற்றாண்டில் தொழில்துறை வளர்ச்சி 3.O எனும் கட்டத்தை எட்டியது. இதில் கணினி மற்றும் தானியங்கி இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.
சீனாவும், ரஷ்யாவும் உதவி
4.O வளர்ச்சி என்பது செயற்கை நுண்ணறிவு, ரோபோக்கள், இணையம் வழியாக இயங்கும் இயந்திரங்கள், பெரிய தரவுகள் மற்றும் மெஷின் லேர்னிங் இவற்றை ஒருங்கிணைப்பதாகும். சீனா இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. மற்ற பிரிக்ஸ் நாடுகளும் இதை சாத்தியப்படுத்த வேண்டும் என்று சீனாவின் பிரதிநிதி சியாடியா கூறியுள்ளார்.
ரஷ்ய வணிகத்துறை துணை அமைச்சரான அலெக்சே குரூஸ்தெவ், "தொழில்துறை டிஜிட்டலைசேஷன், மனிதவள மேம்பாடு, சிறு நிறுவன வளர்ச்சி ஆகியவற்றில் எங்களின் அனுபவத்தை பகிர தயார்" என்று கூறியிருக்கிறார். இந்த அனுபவ பகிர்வு அவ்வளவு எளிதில் கிடைக்காது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடம் இதை கேட்டு வாங்க ஒரு மாமாங்கம் காலமே ஆகிவிடும். அப்படி இருக்கையில் ரஷ்யா இந்த தகவலை பகிர முன் வந்திருப்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
இந்தியாவுக்கு பிளஸ் பாயிண்ட்
இந்தியாவில் எம்எஸ்எம்சி எனப்படும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. வேலைவாய்ப்புகளை அளிப்பதில் இதுதான் முக்கிய துறையாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது BCIC உதவி மூலம் இந்த துறை வளர்ந்தார் அது இந்தியாவுக்கு கை கொடுக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications