அமெரிக்காவுக்கு அடுத்த தலைவலி.. டாலருக்கு செக்! சீனா மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை
பெய்ஜிங்: அமெரிக்காவின் ஆதிக்கமே அதன் சொந்த கரன்சியான டாலரில்தான் இருக்கிறது. இதற்கு முடிவு கட்டும் வகையில், சீனா புதிய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
சீனாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை பொருளாதார ரீதியில் பலவீனமாக்கும் என்று சொல்லப்படுகிறது. இன்று இல்லையென்றாலும் விரைவில் அமெரிக்காவின் டாலர் மதிப்பு வேகமாக குறைய தொடங்கும் என சொல்லப்படுகிறது.

ஒரு வங்கி கணக்கில் இருந்து இன்னொரு வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப நாம் கூகுள் பே போன்ற பண பரிவர்த்தனை முறைகளை பயன்படுத்துகிறோம். ஆனால் இதுவே ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பணம் அனுப்ப swift எனப்படும் முறை பின்பற்றப்படுகிறது. உதாரணமாக இந்தியா சவுதியிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குகிறது எனில் அதற்கான தொகை swift முறையில் அனுப்பப்படும். இந்த முறையை பயன்படுத்த கட்டணம் உண்டு. அதே போல இது அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ஒரு வேளை அமெரிக்காவிடம் நாம் சண்டை இழுக்கிறோம் எனில், நம்மை இந்த swift அமைப்பிலிருந்து தூக்கிவிடுவார்கள். ரஷ்யாவை இப்படித்தான் அமெரிக்கா தூக்கியது.
இதையெல்லாம் பார்த்த சீனா, தனக்கென சொந்த பண பரிவர்த்தனை அமைப்பை உருவாக்கியிருக்கிறது. cips என்று இதற்கு பெயர். இதனை கொண்டு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பணத்தை அனுப்ப முடியும். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய முடியும். உதாரணத்திற்கு இந்தியா-சீனாவிடமிருந்து எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். இதற்காக நாம் அமெரிக்க டாலரில் பணத்தை கொடுக்க வேண்டியதில்லை.
மாறாக நம்மூர் ரூபாயை கொடுத்தால் போதுமானது. இதற்கான கட்டணமும் குறைவு. இவையெல்லாம்தான் cips அமைப்பில் இருக்கும் பிளஸ் பாயிண்ட்கள். இந்த முறையை பிரிக்ஸ் நாடுகளுக்கு அமல்படுத்த சீனா திட்டமிட்டிருக்கிறது. மட்டுமல்லாது இந்த அமைப்பை பிரபலப்படுத்தும் பணியை அதிகாரப்பூர்வமாக சீனா தொடங்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது.
முதலில் இந்த அமைப்பை ஷாங்காய் பகுதியில் முழுமையாக அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறது. சீனாவின் பெரும்பகுதி வணிகம் இந்த இடத்தில்தான் நடக்கிறது. எனவே இங்குள்ள வணிக நிறுவனங்கள் cips அமைப்பை பயன்படுத்த வேண்டும் என்று சீனா உத்தரவிட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த அமைப்புக்கு என சொந்த பயனர்கள் உருவாவார்கள்.
ஒரு அரசு இன்னொரு அரசுக்கு பணம் செலுத்த இந்த முறையை பயன்படுத்துவதை போல, தனி நபர்களும், இன்னொரு நபருக்கு பணம் அனுப்ப இதை பயன்படுத்தலாம். இதில் நீங்கள் குறைந்தபட்சம் இவ்வளவுதான் அனுப்ப வேண்டும் என்பது கிடையாது. ரூ.3000 கூட இந்த முறையில் நீங்கள் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியும். எனவே சிறு, குறு நிறுவனங்கள் கூட சர்வதேச வர்த்தகத்திற்கு இந்த அமைப்பை பயன்படுத்தும்.
தற்போது உலகம் முழுவதும் இந்தியா உட்பட 110 நாடுகள் இந்த அமைப்பில் இணைந்திருக்கின்றன. மொத்தம் 1300க்கும் அதிகமான வங்கிகள் இதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தியாவில் ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் இந்த அமைப்பை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே, இந்தியாவிலிருந்தும் பணம் அனுப்ப முடியும். இதன் மூலம் சொந்த நாட்டு கரன்சியை அனுப்ப முடியும்.
உதாரணத்திற்கு நீங்கள் ரூ.3000ஐ இங்கிருந்து சீனாவுக்கு swift முறையில் அனுப்புகிறீர்கள் எனில், இந்த பணம் முதலில் டாலராக மாற்றப்பட்டு பின்னர் சீனா நாட்டு பணமான யுவானாக மாற்றப்படும். ஆனால் இந்த cips முறையில் நேரடியாக பணம் யுவானாக மாற்றப்படும் என்பதுதான் சிறப்பு. இப்படி பல சிறப்புகள் மூலம் சீனா தனது சொந்த கரன்சி டிரன்ஸ்பர் முறையை பிரபலப்படுத்த இருக்கிறது. இது அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை குறைக்கும்.
அப்படி மட்டும் நடந்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடுமையாக அடி வாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications