பிரிக்ஸ் மாநாட்டில் கைகோர்க்கும் சீனா+ரஷ்யா.. இந்தியா இணையுமா? இணைந்தால் நன்மைகள் இதுதான்
டெல்லி: அடுத்த மாதம் பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் நிலையில், மாநட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா அதிபர்கள் இணைந்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடந்த காலங்களில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு சொல்லிக்கொள்ளும்படி அவ்வளவு சிறப்பாக இல்லை. இப்படி இருக்கையில் மூன்று நாடுகளின் கூட்டமைப்பில் மீண்டும் இந்தியா இடம்பெறுமா? பிரதமர் நரேந்திர மோடி இதற்கு ஒப்புக்கொள்வாரா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
மூன்று நாடுகள் இணைந்து ஐ.ஆர்.சி (RIC) என்கிற உச்சி மாநாட்டை ஏற்கெனவே நடத்தியிருக்கின்றன. இது முன்னாள் ரஷ்ய பிரதமர் யெவ்ஜெனி ப்ரிமாக்கோவ் முயற்சியால் உருவாக்கப்பட்டது.

முதல் மாநாட்டுக்கு பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு, இரண்டாவது மாநாடு கடந்த 2018ல் புவெனஸ் அயர்ஸில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் இடையே நடத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் அடுத்த ஆண்டே அதாவது, 2019ல் ஒசாகாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் போது மூன்றாவது ஆர்.ஐ.சி உச்சி மாநாடு நடந்தது.
ஆனால் கடந்த 2020 முதல் இந்த மாநாடு நடத்தப்படவில்லை. கோவிட் 19 தொற்று பாதிப்பு காரணமாக மொத்த உலகமும் அந்த நேரத்தில் முடங்கியிருந்தது. இந்த பிரச்சனையிலிருந்து வெளியில் வருவதற்குள் இந்தியா-சீனா ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டுவிட்டது. எனவே நேரடியாக மாநாடு நடக்கவில்லை. இருப்பினும் வீடியோ கால் வழியாக மாநாடு நடந்தது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவுத்தறை அமைச்சர் ஜெய்சங்கர் மட்டுமே பங்கேற்றிருந்தார்.
இப்படி இருக்கையில் அடுத்த மாதம் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் மீண்டும் மூன்று தலைவர்களும் நேரில் சந்திக்கின்றனர். இம்மாநாட்டின் ஒரு பகுதியாக ஐஆர்சி மாநாடு நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதில் இந்தியா சார்பில் மோடி பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறிதான். இந்த மாநாட்டை நடந்த ரஷ்யா ஆர்வமாக இருக்கிறது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், "இந்த மாநாட்டை நடத்த நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். ஏனெனில் இதை தொடங்கி வைத்ததே நாங்கள்தான்" என்ற கூறியுள்ளார்.
இந்தியா இதில் பங்கேற்பது சந்தேகம்தான் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் சீனா உடனான மோதல் இரு தரப்பு உறவை பாதித்திருந்தாலும், சமீபத்தில் இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு, நமக்கு ஆதரவாக நிற்காமல் சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றது. இதை இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதில் பங்கேற்பது வாய்ப்பு இல்லாத விஷயமாக இருக்கிறது.
ஆனால் மற்றொருபுறம் இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. அதாவது, சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிய காந்தங்களை கொண்டுதான் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை இயங்கி வருகிறது. இப்போது இந்த ஏற்றுமதியை சீனா நிறுத்தியுள்ளது. எனவே இந்தியா உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டை பயன்படுத்தி இந்தியாவுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று மோடி வலியுறுத்தலாம். எனவே இதில் அவர் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
எதுவாக இருந்தாலும் பொறுத்திருந்துதான் பாரக்க வேண்டும். மோடி பங்கேற்று, இந்தியா-சீனா இடையேயான வர்த்தக உறவை தடையின்றி தொடர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications