வரியா போடுற வரி.. டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் பிரிக்ஸ்! சிக்கலில் அமெரிக்கா!
ரியோ டி ஜெனிரோ: வரி மூலம் உலகத்தையே அச்சுறுத்தி வரும் ட்ரம்ப்புக்கு பதிலடி கொடுக்க பிரிக்ஸ் நாடுகள் தயாராகியுள்ளன. இதற்காக நாளை முக்கியமான கூட்டம் பிரேசிலில் நடக்கிறது.
இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்கு எதிரானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

நான் ஆட்சிக்கு வந்தால் 'அமெரிக்கா பர்ஸ்ட்' என்கிற கொள்கையை பின்பற்றுவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அதேபோல அவர் அதிபரான பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இது உலக வர்த்தகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நமக்கு தெரிந்தது சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் போட்ட வரி மட்டும்தான். ஆனால் அவர் வேறு சில வேலைகளையும் பார்த்திருக்கிறார்.
அதாவது, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை டிரம்ப் வெளிப்படையாகவே பின்பற்ற மறுத்திருந்தார். தனிநபர் நாடுகளுடன் நேரடி வர்த்தக உடன்பாடுகளை விரும்பினார். இது சர்வதேச வர்த்தக நடைமுறைக்கு எதிரானதாகும். மட்டுமல்லாது வெகு சீக்கிரத்திலேயே இதற்கான விளைவுகள் தெரிய தொடங்கிவிட்டன. குறிப்பாக உலகம் முழுவதும் நடைபெற்று வந்த வர்த்தகம் குறைந்தது. இது உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியை மந்தமாக்கியது.
உலக நாடுகளின் வளர்ச்சி குறித்து ஐஎம்எஃப் ஏற்கெனவே ஒரு அளவீட்டை கொடுத்திருந்தது. அதன்படி இந்த ஆண்டு, இந்த நாடுகள் எல்லாம் இவ்வளவு வளர்ச்சியடையும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், இந்த அளவீட்டை ஐஎம்எஃப் தற்போது திருத்தி அமைத்திருக்கிறது. அதாவது ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்த வளர்ச்சியை காட்டிலும் இந்த ஆண்டு வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்று ஐஎம்எஃப் கூறியிருக்கிறது.
மறுபுறம் வரி அதிகரிப்பால் உற்பத்தி செலவுகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் முதலீடுகள் குறைந்தன, பணப்புழக்கத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. இவையெல்லாம் சேர்த்து பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்தியிருக்கிறது. ஸ்டீல், அலுமினியம், தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
எனவே இவற்றிற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு பிரிக்ஸ் நாடுகளுக்கு இருக்கிறது. எனவே நாளை நடக்கும் பிரிக்ஸ் நாடுகளின் தூதர்கள் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. பிரேசிலிய வெளிவிவகார அமைச்சர் மவுரோ வியேரா இந்த கூட்டத்தை தலைமையேற்று நடத்துகிறார். இதில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கீ லாவ்ரோவ் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக நாளை மாலை கூட்டு அறிக்கை வெளியாகும்.
இந்த அறிக்கைதான் மிக முக்கியமானதாகும். இதில் அமெரிக்காவின் பொருளாதார நிலைப்பாட்டிற்கு எதிராக பிரிக்ஸ் என்ன செய்யப்போகிறது என்பது தெரியப்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications