இங்கிலாந்து தொண்டு நிறுவன பணியாளர் தலையை துண்டித்து ஐ.எஸ். வெறியாட்டம்!
ரக்கா: இங்கிலாந்து நாட்டு தொண்டு நிறுவன பணியாளர் ஆலன் ஹென்னிங் என்பவரது தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம் ஆடியுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.' தீவிரவாதிகள் அமைத்துள்ளனர். இவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க தாக்குதல் நடத்தும் அமெரிக்கா மற்றும் அந்நாட்டுக்கு துணை போகும் இங்கிலாந்தை மிரட்ட இரு நாட்டு குடிமகன்களை பிணைக் கைதிகளாக்கி தலையை துண்டித்து கொலை செய்து வருகின்றனர்.

மூவர் தலை துண்டிப்பு
சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை திரட்டி வந்த அமெரிக்க நிருபர்கள் 2 பேரையும், இங்கிலாந்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகிய 3 பேரையும் தலை துண்டித்து படுகொலை செய்தனர். அந்த வீடியோக்களை வெளியிட்டு சர்வதேச அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினர்.

ஆலன் ஹென்னிங் கடத்தல்
முன்னதாக வடமேற்கு இங்கிலாந்தின் மான்செஸ்ட்டர் பகுதியைச் சேர்ந்த ஆலன் ஹென்னிங் சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கு வழிகாட்டியாக சென்ற போது 10 மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

ஹென்னிங் தலை துண்டிப்பு
இந்த நிலையில் ஆலன் ஹென்னிங்கையும் கொலை செய்யப் போவதாக கடந்த வாரம் தீவிரவாதிகள் அறிவித்தனர். அவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது.

கேமரூன் கடும் எச்சரிக்கை
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், மற்றவர்களுக்கு உதவி செய்யப்போன ஆலன் ஹென்னிங்கை கடத்திச் சென்று கொன்றதில் இருந்து இந்த தீவிரவாதிகள் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானவர்கள்? என்பது தெளிவாகின்றது. இவர்களை வேட்டையாடி, நீதியின் முன்பு நிறுத்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்வோம் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications