அமெரிக்க பத்திரிகையாளரின் தலையைத் துண்டித்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர்?
லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் சிரியாவில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ்போலியைக் கொலை செய்த தீவிரவாதி இங்கிலாந்தைச் சேர்ந்தவர் போலத் தெரிவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் பிலிப் ஹேமன்ட் தெரிவித்துள்ளார்.
கொலை செய்த நபர் இங்கிலாந்துக்காரரா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் ஹேமன்ட் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது கோடை விடுமுறையை ரத்து செய்து விட்டு லண்டன் திரும்பியுள்ளார்.

ஐரோப்பிய தீவிரவாதிகள்
மேலும் அவர் கூறுகையில், ஐரோப்பாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் தற்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இணைந்து தாக்கி வருகிறார்கள். இவர்கள் அவரவர் நாடுகளுக்குத் திரும்பும்போது மிகப் பெரிய அபாயகரமான மிரட்டலாக விளங்குவார்கள்.

இங்கிலாந்து உச்சரிப்புடன் பேசும் தீவிரவாதி
சம்பந்தப்பட்ட வீடியோவில் உள்ள தீவிரவாதி இங்கிலாந்து உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில் பேசுவது தெளிவாகத் தெரிகிறது.

சிரியா - ஈராக்கில் இங்கிலாந்து நாட்டவர்
சிரியாவில் கணிசமான இங்கிலாந்து நாட்டவர் உள்ளனர். அதேபோல ஈராக்கிலும் உள்ளனர். இவர்களால் எங்களது நாட்டின் பாதுகாப்பும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

400 பேர்
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சிரியாவுக்கு 400 இங்கிலாந்து நாட்டவர் போயிருக்கலாம் என்று கருதுகிறோம்

மிகவும் கொடூரமான கொலை
ஜேம்ஸ் போலி கொலை மிகக் கொடூரமானது, ஈவு இரக்கமற்றது, மனித நேயற்றது. மிகக் கொடுமையான, குரூரமான இயக்கம் ஐஎஸ்ஐஎஸ் என்பதை இது நிரூபிக்கிறது.

சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்
இப்படிப்பட்ட குரூரமான இயக்கத்தினரிடமிருந்து ஈராக், சிரியாவைக் காப்பாற்ற உலக சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணியை இங்கிலாந்து தீவிரப்படுத்தும் என்றார் அவர்.

கேமரூன் லண்டன் விரைந்தார்
இதற்கிடையே, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது விடுமுறையை ரத்து செய்து விட்டு லண்டன் விரைந்துள்ளார். உயர் அதிகாரிகளுடன் அவர் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications