துருக்கியில் பெருகும் குழந்தைகள் மீதான வன்முறை – வலுக்கும் மக்கள் எதிர்ப்பு
அங்காரா: துருக்கியில் பெருகி வரும் குழந்தைகள் சம்பந்தபட்ட கொலைச் செயல்களால் அங்கு மக்கள் கொந்தளித்துப் போய் உள்ளனர்.
ஐரோப்பிய யூனியனுடன் இணையும்பொருட்டு கடந்த 2002ஆம் ஆண்டு துருக்கி மரணதண்டனைத் தீர்ப்பை ரத்து செய்தது.
ஆனால் சமீப காலங்களில் அங்கு நடைபெற்றுவரும் குழந்தைக் கொலைகள் மக்களிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
குற்ற தண்டனை:
இத்தகைய குற்றங்கள் தீவிரமாகத் தண்டிக்கப்படவேண்டும் என்றும் மரணதண்டனை சட்டங்கள் அங்கு திரும்ப கொண்டுவரப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளது.
குழந்தைகள் மீது வன்முறை:
ஆறு வயது பெண்குழந்தை ஒன்று 20 வயது இளைஞன் ஒருவனால் துன்புறுத்தப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டு பின்னர் எரித்துக் கொல்லப்பட்டதுவும், இந்த மாத தொடக்கத்தில் ஒன்பது வயது சிறுவன் ஒருவன் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதுவும் இங்கு மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
கொலைகள் குறையுமா?:
மேலும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான்கு வயது சிறுவன் ஒருவன் கொலையுண்டு கிடந்ததுவும் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தியது. குழந்தைக் கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்று கோரும் மக்கள் சமூகம், மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதுவே அங்கு குற்றங்கள் அதிகரிக்கக் காரணமாக உள்ளது என்றும் குறிப்பிடுகின்றது.
மரணதண்டனை அவசியம்:
இந்தக் கருத்தை அங்குள்ள இஸ்லாமிய சாடெட் கட்சியின் இணைத் தலைவர் யூசுப் யிகிடல்ப் ஆமோதிக்கின்றார். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மரண தண்டனைத் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஐரோப்பாவிலும் சில குற்றங்களுக்கு இந்தத் தண்டனை உண்டு என்று யூசுப் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் தண்டனை கிடைக்கும்:
மரணதண்டனைத் தீர்ப்பை மறுபடி அமலுக்கு கொண்டு வருவது இயலாத காரியம் என்று தெரிவித்துள்ள துருக்கி பிரதமர் ரிசெப் டையிப் எர்டோகன் அதற்கு பதிலாக குழந்தைக் கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications