பூமிக்கு அடியில் உரிந்து விழும் க்ரஸ்ட்.. இப்படியே போனால் ஒன்றும் தாங்காது போலயே! அரண்ட ஆய்வாளர்கள்
நெவேடா: அமெரிக்க ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் ஒரு அதிர்ச்சி தரும் விஷயம் தெரிய வந்துள்ளது. அதாவது பூமியின் உட்புறம் உள்ள க்ரஸ்ட் எனப்படும் மேலோட்டின் சில பகுதிகள் உரிந்து மேண்டில் (mantle) பகுதியில் கரைந்து வருவதாகவும் இது பூமியின் க்ரஸ்ட் பகுதியைப் பலவீனமான ஒன்றாக மாற்றுவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பூமி எப்படி உருவானது.. பூமியில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடந்து வருகிறது என்பது குறித்து ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.

உரிந்து வரும் க்ரஸ்ட்:
அப்படி நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது பூமியின் உட்புறம் உள்ள க்ரஸ்ட் எனப்படும் மேலோட்டத்தின் சில பகுதிகள் உரிந்து மேண்டில் (mantle) பகுதியில் கரைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியாவின் சியரா நெவாடா மலைகளுக்கு அடியில் இந்த புவியியல் மாற்றம் வேகமாக நடந்து வருவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
பல லட்சம் ஆண்டுகளாகவே பூமிக்கு அடியில் இதுபோன்ற மாற்றங்கள் நடந்து வருவதாகவும் கண்டங்கள் எப்படி உருவாகின என்ற கேள்விக்கு இவை பதிலை அளிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கண்டங்கள்:
கண்டங்கள் எப்படி உருவாகி என்ப குறித்து நம்மிடம் தெளிவான பதில்கள் இல்லை. இருப்பினும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பல மாற்றங்களின் விளைவாகவே கண்டங்கள் தோன்றியதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தொடக்கக் காலத்தில் பூமியின் மேற்பரப்பு முழுக்க முழுக்க உருகிய பாறைகள் நிறைந்த ஒன்றாக இருந்தது. அது மெல்லக் குளிர குளிர, ஃபெல்சிக் தாதுகள் போன்ற இலகுவான பொருட்கள், அடர்த்தியான தாதுகளிலிருந்து பிரியத் தொடங்கின. தண்ணீரில் எப்படி எண்ணெய் மிதக்குமோ அதுபோல இலகுவான பொருட்கள் மேலே நின்றுவிட்டன. அடர்த்தியான தாதுகள் பூமிக்கு அடியில் போய்விட்டன. அதன் பிறகு மெல்லப் பல லட்சம் ஆண்டுகளாக நடந்த மாற்றத்தைத் தொடர்ந்து பூமி நாம் இப்போது இருக்கும் நிலையை அடைந்துள்ளது.
புதிய ஆய்வு:
இதற்கிடையே ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில் பூமியின் மேலோட்டத்தின் அடர்த்தியான பகுதிகள் மேண்டில் பகுதியில் மூழ்குவதாகவும் இதனால் க்ரஸ்ட் பகுதி இலகுவானதாக மாறி வருவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது குறித்து அதில் மேலும் கூறுகையில், "பல கோடி ஆண்டுகளாக நமது பூமிக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு நமக்குப் பயன்படும். வரும் காலத்தில் இது குறித்து நடத்தப்படும் ஆய்வுகளில் கண்டங்கள் எப்படி உருவானது என்ற தெளிவான புரிதல் நமக்கு கிடைக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.
அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பம்
மூலம் உரிந்து வரும் செயல்முறையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மலைத்தொடரின் தெற்குப் பகுதி, மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு க்ரஸ்ட் பகுதி மேண்டிலில் மூழ்கியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அதேநேரம் மலையின் மத்திய பிராந்தியத்தில், மேற்பரப்பிற்கு அடியில் சிறிய ஆழமான பூகம்பங்கள் ஏற்படுவதாகவும் இதனால் அங்குள்ள க்ரஸ்ட் பகுதி மெல்ல மேண்டிலில் மூழ்கி வருவதாகவும் கூறுகிறார்கள். சியரா நெவாடாவின் வடக்குப் பகுதியில் இதுவரை இதுபோன்ற செயல்முறை நடக்கவில்லை. அங்கு க்ரஸ்ட் அடர்த்தியாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.
சிக்கல் வரலாம்:
அதாவது க்ரஸ்ட் பூமியின் மேண்டிலில் மூழ்கும் செயல்முறை தெற்கில் இருந்து நடந்து வருகிறது. தெற்கு பகுதியில் ஏற்கனவே க்ரஸ்ட் மூழ்கிவிட்ட நிலையில், மத்திய பகுதியில் இப்போது தான் நடந்து வருகிறது. வடக்கு பகுதியில் இது ஆரம்பிக்கவில்லை. இந்த மாற்றம் வரும் காலங்களிலும் கூட தொடரலாம். இதனால் பூமியில் பல விதமான சிக்கல்கள் உருவாகும் என்றும் அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications