போராடும் விவசாயிகள் மீது தாக்குதல்.. கொந்தளிக்கும் கனடா எம்பிகள்.. பிரதமருக்கு அதிகரிக்கும் அழுத்தம்
ஒட்டாவா: டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கனடா அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்க்கட்சி எம்பிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்திய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர்.
இதை வலியுறுத்தி குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது. அதில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்தார். மேலும் காவல் துறை தரப்பிலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், அப்போது நிலைமையைச் சமாளிக்க விவசாயிகள் மீது போலீசார் தடியடியும் நடத்தினர்.

எதிர்க்கட்சி கண்டனம்
இந்நிலையில், விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்குக் கனடா நாட்டு எதிர்க்கட்சி எம்பிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து புதிய ஃபேடரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், "விவசாய துறையை தனியார்மயமாக்குவதை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு எதிராக வன்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. வன்முறைக்குப் பதிலாக இந்திய அரசு விவசாயிகளுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள்
இது குறித்து புதிய ஃபேடரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் தனது ட்விட்டரில், "இந்தியாவில் விவசாயிகள் மீதான வன்முறை கவலை அளிப்பதாக உள்ளது. அமைதியான முறையில் போராடும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வன்முறையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். கனடாவின் முன்னாள் அமைச்சரும் கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.யுமான டிம் உப்பலும் விவசாயிகள் மீதான வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய அதிகாரிகள் விளக்கம்
இருப்பினும், விவசாயிகள் மீதான வன்முறையை எதிர்த்து கருத்துக் கூறியுள்ள ஜக்மீத் சிங்கும் சரி, மற்ற சீக்கிய அமைப்புகளும் சரி, குடியரசு தினத்தன்று போலீசார் மீது நடந்த தாக்குதல் குறித்தும், மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தை குறித்தும் பேசுவதில்லை என இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர், மேலும், சில சீக்கிய அமைப்புகளே இந்தப் பிரச்னையை கனடாவில் எழுப்புவதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்,

பிரதமருக்கு அழுத்தம்
கனடாவில் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், இது குறித்துப் பதிலளிக்க வேண்டிய அழுத்தம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எழுந்துள்ளது. இருப்பினும், கடந்த சில காலமாகப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது வெளியுறவு அமைச்சர் மார்க் கார்னியோ ஆகியோர் டெல்லி போராட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்தே வருகின்றனர்.

ஜஸ்டின் ட்ரூடோ கருத்து
முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் பேஸ்புக் நேரலையில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "அமைதியான போராட்டங்களுக்குக் கனடா எப்போதும் ஆதரவு அளிக்கும். எந்தப் பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும். விவசாயிகள் போராட்டம் குறித்து எங்கள் கவலைகளை இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம்" என்று கூறினார். ஜஸ்டின் ட்ரூடோ கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த மத்திய அரசு, இந்தியாவுக்கான கனடா தூதரை அழைத்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications