காதல் மனைவியை பிரியும் ஜஸ்டின் ட்ரூடோ.. முடிவுக்கு வந்த 18 ஆண்டு திருமண வாழ்க்கை.. என்ன காரணம்
ஒட்டாவா: கனடா நாட்டின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ தனது காதல் மனைவி சோஃபியை பிரிய உள்ளதாக அறிவித்துள்ளார்.
உலகளவில் பிரபலமாக இருக்கும் அரசியல் தலைவர்களில் ஒருவர் கனடா நாட்டின் ஜஸ்டின் ட்ரூடோ. லிபரல் கட்சியின் தலைவராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் கனடா பிரதமராக இருந்து வருகிறார்.
இதற்கிடையே ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது மனைவி சோஃபியும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் அவர்களின் 18 வருடத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

பிரிந்து வாழ முடிவு: தானும் சோஃபியும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த ஜோடி திடீரென பிரிந்துள்ளது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருள் ஆகியுள்ளது.
மேலும் ட்ரூடோ தரப்பில் கூறுகையில், "அவர்கள் பிரிந்து செல்வது தொடர்பான சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அடுத்து என்ன செய்யலாம் என முடிவெடுப்பார்கள். அதேநேரம் அவர்கள் ஒரு நெருக்கமான குடும்பமாக இருக்கிறார்கள். சோஃபியும் பிரதமரும் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பான, அன்பான மற்றும் குடும்பச் சூழலில் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.. அடுத்த வாரம் அவர்கள் ஒன்றாக விடுமுறை செல்லவுள்ளனர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ: ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் எலியட் ட்ரூடோ ஆவர். அவரும் கனடா நாட்டின் பிரதமராக இருந்தார். தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அரசியலில் நுழைந்தவர் தான் ஜஸ்டின் ட்ரூடோ.. அவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராக இருந்தார். அதன் பின்னரே அரசியலில் நுழைந்து பிரதமர் பதவியையும் அடைந்துள்ளார்.
இப்போது கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு வயது 51. மேலும், சோஃபிக்கு வயது 48 ஆகும். ட்ரூடோவும் சோஃபியும் சிறு வயது நண்பர்கள். அவர்கள் இருவரும் காதலித்துக் கடந்த மே 2005இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாகக் கூறப்படுகிறது.
சோஃபி: ட்ரூடோவை திருமண் செய்வதற்கு முன்பு, சோஃபி ஊடகம் ஒன்றில் என்டர்டெயின்மென்ட் செய்தியாளராக இருந்தார். இருவருக்கும் சேவியர் (15) எல்லா கிரேஸ் (14) ஹாட்ரியன் (9) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

என்ன காரணம்: இத்தனை ஆண்டுகளாகச் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த ஒரு ஜோடியாகவே ட்ரூடோ தம்பதி இருந்துள்ளது. பொது இடங்களில் ஒன்றாகத் தோன்றும் போதும் கூட அவர்கள் பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாகப் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்கள் பொதுவெளியில் தங்கள் அன்பைக் காட்டத் தவறியதில்லை. இருப்பினும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில் அதுவே இவர்கள் பிரிவுக்குக் காரணமாக இருந்துள்ளது.
பல நேரங்களில் இருவரும் அளித்த பேட்டிகளில் இதை நம்மால் பார்க்க முடியும். கடந்த ட்ரூடோ 2014இல் ட்ரூடோ கூறுகையில், "எங்கள் திருமணம் மிகவும் பொருத்தமான ஒன்று எனச் சொல்ல முடியாது. பிரச்சினைகள் இருக்கவே செய்தது. இருப்பினும், சோஃபி எனது சிறந்த தோழியாக, என் துணையாக இருக்கிறார். நாங்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.
எனது கனவுகள்: அதேபோல அவரது மனைவி சோஃபி கடந்த 2015இல், "எங்கள் திருமணத்தில் பிரச்சினை இருக்கவே செய்கிறது. இருப்பினும், நாங்கள் இருவரும் நேர்மையாக இருக்க முயல்கிறோம். எங்கள் இருவருக்கும் பல்வேறு கனவுகள் இருக்கிறது. இருவருமே எங்கள் கனவுகளை நனவாக்க முயல்கிறோம். அதை நோக்கிச் செல்ல விரும்புகிறோம்" என்று கூறியிருந்தார்.
இத்தனை காலம் ட்ரூடோவுக்கு பெரிதும் உறுதுணையாக சோஃபி இருந்துள்ளார். அவர் கடந்த 2015இல் முதல்முறையாகப் பிரதமர் பதவிக்குப் போட்டியிடும் போது, சோஃபியும் பல இடங்களில் நேரில் சென்று பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications