அமித்ஷா மீது வேண்டும் என்றே அவதூறு.. அமெரிக்க ஊடகத்திற்கு சீக்ரெட் தகவலை லீக் செய்த கனடா அதிகாரிகள்!
ஒட்டாவா: கனடாவில் கடந்த ஆண்டு காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே மோதல் போக்கு வெடித்திருக்கிறது. இந்நிலையில், இக்கொலை வழக்கில் அமித்ஷாவின் பெயர் அடிப்பட்டிருக்கிறது. இது குறித்த ரகசிய தகவலை கனடா அதிகாரிகள் வேண்டும் என்றே அமெரிக்க ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்தியாவில், மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், இந்த பிரிவினைவாதிகள், வெளிநாடுகளிலிருந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து கடனாவுக்கு புலம் பெயர்ந்து, அங்கு வசித்து வந்த நிஜ்ஜார் எனும் காலிஸ்தான் ஆதரவாளரும், இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டு குறித்து கனடா பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை.

இப்படி இருக்கையில்தான் கடந்த ஆண்டு நிஜ்ஜார் கனடாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இது குறித்த விசாரணையை அந்நாட்டு அரசு தொடங்கியது. விசாரணையின்போது, இந்தியா மீது கனடா வெளிப்படையாகவே குற்றம்சாட்டியது. இந்தியா இதனை மறுக்க.. இரு நாடுகளுக்கு இடையே பெரிய பஞ்சாயத்து வெடித்தது. இந்திய தூதுரக அதிகாரிகளை, கனடா வெளியேற்ற.. பதிலுக்கு இந்தியாவும் இதையே செய்தது.
இப்படி இருக்கையில், அமித்ஷாவின் உத்தரவின் பேரில்தான் இந்த கொலை நடந்திருப்பதாக, வாஷிங்டன் போஸ்ட் எனும் அமெரிக்க ஊடகம் செய்தியை வெளியிட்டிருந்தது. கனடா அதிகாரிகள்தான் இந்த தகவலை அமெரிக்க ஊடகத்திற்கு பகிர்ந்திருக்கின்றனர். மட்டுமல்லாது இரு நாடுகளுக்கு இடையே மட்டும் பகிர்ந்துக்கொள்ளப்பட வேண்டிய பல முக்கிய தகவல்கள் அமெரிக்க ஊடகத்திற்கு தெரிய வந்திருக்கிறது. கனடா அதிகாரிகளின் இந்த செயல், அமித்ஷாவையும் இந்தியாவையும் அவமானப்படுத்த வேண்டும் எனிகிற நோக்கில் இருந்ததாக அசோசியேட் பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆலோசகர் நதாலி ட்ரூயின் மற்றும் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் ஆகியோர்தான், ரகசிய தகவல்களை அமெரிக்க ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கை குறித்து கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. ஆயினும், இதை தடுக்காமல் அவர் இருந்திருக்கிறார் என்றும் அசோசியேட் பிரஸ் விமர்சித்துள்ளது.
ஏற்கெனவே இந்தியா-கனடா உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்யும் பணியில் இரு நாட்டு அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் முயற்சியை மொத்தமாக சீர்குலைக்கும் நோக்குடன் நதாலி ட்ரூயின், டேவிட் மோரிசனின் நடவடிக்கை அமைந்துள்ளது. இந்தியாவுடன் மட்டுமே பகிர்ந்துக்கொள்ள வேண்டிய விஷயங்களை பொதுவெளியில் சொல்வது, இரு நாட்டு உறவை முன்னெப்போதும் இல்லாததைவிட அதிகமாக பாதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications