கனடா: போலீஸ் நாயை கொன்றவருக்கு 26 மாத சிறை... 25 ஆண்டுகள் செல்லப்பிராணி வளர்க்க தடை
டொராண்டோ: கனடா நாட்டில் குடிபோதையில் போலீஸ் நாயைக் குத்திக் கொன்ற இளைஞருக்கு 26 மாதங்கள் சிறை தண்டனையும், 25 ஆண்டுகள் செல்லப் பிராணிகளை வளர்க்கத் தடையும் விதிக்கப் பட்டுள்ளது.
கனடா நாட்டின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள எட்மொண்டன் பகுதியை சேர்ந்த பால் ஜோசப் உக்மனிச்(27) என்ற இளைஞர், கடந்த அக்டோபர் மாதம் அளவுக்கதிகமான மது அருந்தி விட்டு காரை திருடிச் சென்றுள்ளார்.
தகவலறிந்த போலீசார் அவரை வழி மறித்தனர். போலீசைக் கண்டதும் காரை நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சி செய்துள்ளார் ஜோசப். அவரைப் பிடிப்பதற்காக போலீஸ் நாய் ஏவப்பட்டது.
ஜெர்மென் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த அந்த நாய் ஆக்ரோஷத்துடன் பால் ஜோசப்பை விரட்டியபடி ஓடியது. போலீசார் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் ஓடிக் கொண்டிருந்த ஜோசப் திடீரென தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை உருவி நாயை வெறித்தனமாக குத்திக் கொன்றார்.
இதையடுத்து ஜோசப் கைது செய்யப்பட்டார். அவர் மீது அளவுக்கு அதிகமான போதையில் இருந்தது, திருட்டுக் காரை ஓட்டி வந்தது, நாயை குத்திக் கொன்றது என தனித்தனியாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் முடிவில், போலீஸ் நாயை குத்திக்கொன்ற வழக்கில் ஜோசப்புக்கு 26 மாத சிறை தண்டனை விதித்த நீதிபதி, இன்னும் 25 ஆண்டுகளுக்கு அவர் எந்த செல்லப் பிராணியையும் வளர்க்க கூடாது எனவும் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications