அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்: சென்னை சாணக்யா மீன், சீனா குரங்கு கணித்தது பலித்தது
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தான் வெற்றிபெறுவார் என சென்னையின் சாணக்கா மீனும் சீனவின் குரங்கும் கணித்தது பலித்துள்ளது.
வாஷிங்டன்: உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று சீனா குரங்கும், சென்னையின் சாணக்யா மீனும் கணித்தது பலித்துள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்க்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. கருத்துக்கணிப்புகள் மாறி மாறி வந்து தேர்தல் களத்தில் பரபரப்பை அதிகரித்தது.
இந்நிலையில், இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று சென்னையில் சாணக்யா என்ற மீன் கணித்து கூறியுள்ளது. டிரம்ப் படம் ஒட்டப்பட்ட ஒரு டப்பாவும், ஹிலாரி படம் ஒட்டப்பட்ட ஒரு டப்பாவும் அந்த மீன் தொட்டியில் வைக்கப்பட்டது. சாணக்யா மீன் தனது வாயினால் டிரம்ப் படம் ஒட்டப்பட்ட டப்பாவை தொட்டது. மீனின் ஆருடம் இப்போது பலித்துள்ளது. இந்த சாணக்யாதான் 2014ல் இந்தியா கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வெல்லும் என்று கணித்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷியான் ஏரி நிர்வாகத்துக்குச் சொந்தமான குரங்கு மூலம் அமெரிக்க அதிபராக யார் வருவார் என்று கணிக்கப்பட்டது.
இதற்காக இரு வேட்பாளர்களின் உருவபொம்மைகளுக்கு மத்தியில் அமரவைக்கப்பட்ட குரங்கு, இருவரின் உருவ பொம்மைகளையும் மாறி மாறி பார்த்து யோசித்தது. பின்னர் டக் என்று டொனால்ட் ட்ரம்பின் உருவபொம்மைக்கு முத்தமிட்டது. இதன் மூலம் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று அந்த சீன குரங்கு கணித்தது. இதுவே இப்போது பலித்துள்ளது.
அமெரிக்க ஆட்சி நிர்வாகத்தில் நேர்மையை மீட்டெடுப்பதுதான் தற்போது உள்ள மிகப்பெரிய சவால் என்று தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது கூறினார் டொனால்ட் டிரம்ப். அமெரிக்க அதிபரா டிரம்ப் செய்யப்போகும் சாதனை என்ன? என்று உலகமே எதிர்பார்த்துக்கொண்டுள்ளது.