பன்றியின் கண்விழி வெண் படலத்தால் புதிய பார்வையைப் பெற்ற சீனர்
பெய்ஜிங்: சீனாவின் பன்றியின் கண்விழி வெண்படலத்தை மனிதனுக்குப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
தற்போது உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மூலம் ஒருவர் உடலில் இருந்து மற்றொருவருக்கு வெற்றிகரமாக உறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மனிதர்களுக்கு விலங்குகளின் உடல் உறுப்பிஅப் பொருத்தி மருத்துவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

சீனாவில் 60 வயது முதியவரான வாங்ஸினிக்கு கண்பார்வையில் குறைபாடு இருந்தது. இவரால் 10 செ.மீ தூரத்தில் உள்ள அசையும் பொருட்களை மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால், நாளடைவில் அதுவும் பறி போகும் என மருத்துவர்கள் எச்சரித்தனர்.
அதனைத் தொடர்ந்து கண் விழி வெண்படலம் தானமாக கிடைத்து அதனை வாங்ஸினிக்கு பொருத்தினால் அவர் மீண்டும் பார்வை பெறலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், வெண்படலம் தட்டுப்பாட்டால், 'அகள்னியா' என அழைக்கப்படும் பயோ என்ஜினீயரிங் கண்விழி வெண்படலத்தை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இத்தகைய தொழில் நுட்பம் வாய்ந்த விழி வெண்படல செல்கள் பன்றியிடம் இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பன்றியின் விழி வெண்படலம் வாங்ஸினிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. 3 மாதங்களுக்குப் பின்னர் படிப்படியாக வாங்ஸினிக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்தது.
இதனால் இந்த உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றுள்ளதாக சீனாவின் ஷாங்டாங் கண் நிறுவன மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் விழிவெண்படல நோயினால் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பேரை இந்நோய் தாக்குவதாக அந்நாட்டு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் இதுவரை ஆண்டுக்கு 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே தானம் பெற்று இந்த உடல் உறுப்பு ஆபரேசன் மூலம் பார்வை கிடைத்து வருகிறது. தற்போது பன்றியின் விழிவெண்படலம் பொருத்துவது வெற்றி பெற்றுள்ளதன் மூலம், சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பார்வையற்றோர் பயன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications